|
ஜான் ஆபிரகாம்- ஒரு அசல் கலைஞன் |
|
|
|
சுகுணா திவாகர்
|

'அக்கிரகாரத்தில் கழுதை' படத்தில் ஒரு காட்சி
ஜான் ஆபிரகாம் கிழித்துப்போடப்பட்ட நெருப்புக்குச்சியைப்போல இருந்தான் எப்போதும். காற்றைப்போல அலைந்தான். மனிதர்களிடம் முரண்டு பிடித்தான், முரண்பட்டான். சண்டை போட்டான். ஆனால் எப்போதும் மனிதர்களை நேசித்தான்.
1937- கேரளமாநிலம் குன்னங்குளம்தான் அந்த அக்கினிக்குஞ்சை ஈன்றது. அவனது தந்தை தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த கம்யூனிஸ்ட். ஆனாலும் அவனது குடும்பம் சனாதன கத்தோலிக்கக் குடும்பமாகவே இருந்தது. 1965ல் பூனா திரைப்படக் கல்லூரியில் படித்துத் தங்கப்பதக்கம் பெற்றான் ஜான்.
இந்தியச்சினிமாவில் இரண்டுவிதப் பள்ளிகள் இயங்குகின்றன. ஒன்று சத்யஜித்ரேவுடையது. மற்றொன்று ரித்விக் கட்டக்குடையது. கட்டக்கின் தலைமாணாக்கனாக ஜான் திகழ்ந்தான். வாழ்க்கை முழுதும் சினிமா எடுக்கும் தாகத்தோடு அலைந்தான். வணிகச்சினிமாக்காரர்கள், அரசியல்வாதிகள், குடியை வெறுப்பவர்கள் அனைவராலும் விலக்கப்பட்டவனாகவும் வெறுக்கப்பட்டவனாகவும் விளங்கினான் ஜான்.
1969ல்தான் அவனது முதல்படம் 'வித்யார்த்திகளே இதிலே இதிலே' வெளியானது. சில குழந்தைகள் விளையாண்டுகொண்டிருக்கிறார்கள். அவர்களது விளையாட்டில் பங்களாவின் காம்பவுண்டில் இருந்த பிள்ளையார் சிலை உடைந்துபோகிறது. பிறகு அந்த குழந்தைகள் தங்களுகுள் காசு பங்கிட்டு மீண்டும் அந்த பிள்ளையார் சிலையை நிறுவுகிறார்கள். ஆனால் படம் அதோடு முடியவில்லை. மீண்டும் குழந்தைகள் விளையாட ஆரம்பிக்கிறார்கள். மீண்டும் உடைந்து சிதறுகிறது சிலை.
1978ல்தான் அவனது புகழ்பெற்ற தமிழ்படம் 'அக்கிரகாரத்தில் கழுதை' வெளியானது. ஒரு பார்ப்பனப் பேராசிரியர் ஓய்வுபெற்றுத் தன்கிராமத்திற்கு ஒரு கழுதைக்குட்டியோடு வருகிறார். அதனால் அவருக்கும் அக்கிரகாரத்துப் பார்ப்பனர்களுக்கும் இடையில் தகராறு வருகிறது. ஆனால் பேராசிரியர் வீட்டில் வேலைபார்க்கும் தலித்பெண் லட்சுமி கழுதை மீது மிகுந்த பிரியத்தோடு இருக்கிறாள். பேராசிரியர் ஊரில் இலாதபோது கழுதை கோயிலில் கட்டப்படுகிறது. இந்த இடைவெளியில் லட்சுமி யாராலோ 'கெடுக்கப்பட்டு' கர்ப்பமாகிறாள்.
லட்சுமியின் குழந்தை இறந்து பிறக்கிறது. அதற்குக் காரணம் கழுதைதான் என்று பார்ப்பனர்கள் முடிவுகட்டிக் கழுதையைக் கொன்றுவிடுகின்றனர். ஊர் திரும்பிய பேராசிரியர் சுடுகாடு சென்று கழுதையின் மண்டையோட்டை லட்சுமியிடம் கொடுக்கிறார். லட்சுமி ஒரு மரண நடனம் ஆடி அதை அங்கிருக்கும் தலித்துகளிடம் கொடுக்கிறாள். மண்டையோட்டில் தீ பற்றியெரிகிறது, அந்த தீ அக்கிரகாரத்திற்கும் பரவுகிறது.
1980ல் வெளியான ஜானின் 'செறியச்சண்டே க்ரூர கிருத்தியங்கள்' நிலவுடைமையின் உட்சபட்ச கொடூரத்தைச் சொல்கிறது. செறியச்சன் ஒரு குறுவிவசாயி. அந்த ஊரிலுள்ள நிலப்பிரபுவின் கொடுமைகளைக் கண்டு புத்தி பேதலித்துப் போகிறான். பிறகு அந்தக் கொடுமைகளையெல்லாம் தானே இழைத்தவன் என்று நினைக்கத்தொடங்குகிறான். போலிஸ் கலவரத்தை முன்னிட்டு ஊருக்கு வரும்போது ஓடிப்போய்மரத்தில் ஏறிக்கொள்கிறான். இன்றளவும் உலகமயமாகல் யுகம் வரை முதலாளித்துவத்தின் இரக்கமற்ற மனசாட்சி மனநோயாளிகளை உற்பத்தி செய்வதை ஜான் நெகிழ்வாய்ச் சொல்லிச்செல்கிறான்.
பிறகு ஜானும் அவனது நண்பர்களும் சேர்ந்து 'ஒடேசா' சினிமா இயக்கத்தை ஆரம்பிக்கின்றனர். மக்களிடமிருந்து பணம் வசூல் செய்து வினியோகஸ்தர்களையும் தயாரிப்பாளர்களையும் புறக்கணித்து மக்களிடமே படம் போட்டுக்காண்பிக்கிறான் ஜான்.
'அம்ம அறியான்' என்கிற அந்தப் படம் அம்மாவின் மீதுள்ள பாசத்தையும் ஒரு நக்சல்பாரி இளைஞனின் தற்கொலையயும் சொல்லிச்செல்கிறது. இசையில் ஈடுபாடுமிக்க ஒரு இளைஞன் அதே சாகச உணர்வோடும் கலைஞனுக்கே உரிய மெல்லிய மனசோடும் இயகக்த்திற்கு வருகிறான். ஆனால் தற்கொலை செய்துகொள்கிறான். டெல்லிக்குப் பயணம் செய்யும் புருஷன் என்கிற இளைஞன் வழியில் அந்த பிணத்தைப் பார்க்கிறான். எப்படியாவது அவனது தாயிடம் அவன் இறந்துவிட்ட செய்தியைச் சொல்லிவிட வேண்டும் என்கிற அவனது முயற்சியே 'அம்ம அறியான்'.
'அம்மாக்கள் நல்லவர்கள். புரிந்துகொள்ளக்கூடியவர்கள். அம்மாவிடம் சொல்லிவிட்டே புரட்சி செய்யப்போகலாம், தப்பில்லை' என்கிறான் ஜான்.
சினிமா பற்றிய அவனது ஒரு சில கருத்துக்கள்.
"நான் குட்டநாட்டுப் புலையனோடு பிரெக்ட் பற்றியோ மாசேதுங் பற்றியோ பேசமுடியாது. யார் எனக்குப் பணம் கொடுக்கிறார்களோ அவர்களுக்குப் புரியும்படி படம் எடுக்கவேண்டும்"
"படங்களுக்கு சிம்பாலிக் ஷாட் தேவையில்லை. நான் ஒரு கழுதையைக் காட்டுகிறேன் என்றால் அது கழுதைதான். உது உங்களுக்குப் போப்பாகத் தெரிந்தால் அது உங்களது சுதந்திரம்"
"ஸ்டார் ஓட்டலில் தங்கிப் பதினைந்தாயிரம் சம்பளம் வாங்கும் நடிகையை ஏழையாக நடிக்க வைக்க கம்யூனிஸ்ட்கள் படாத பாடு படுகிறார்கள். உணர்வுகளைத் தூண்டிப் படம் எடுத்துக் காசு பறிப்பதில் இங்கே பூர்ஷ்வா சினிமாக்காரர்களும் கம்யூனிஸ்ட் சினிமாக்காரர்களும் ஒன்றுதான்"
" ஒரு சினிமா என்பது இயக்குனரின் சினிமாதான். ஜான் ஆபிரகாமின் சினிமா ஜானின் சினிமாதான். நிச்சயம் எம்.டி.வாசுதேவன்நாயரின் சினிமா அல்ல. ஒரு இயக்குனர் மடையனாக இருந்தால் மட்டுமே சினிமா திரைக்கதையாசிரியனின் சினிமாவாக இருக்க முடியும்"
"நடிகருக்கு சிறந்த நடிகர் என்று அவார்டு கொடுப்பது முட்டாள்தனமானது. உண்மையில் அந்த விருதை இயக்குனருக்குத்தான் கொடுக்க வேண்டும்"
"திராவிடப் பழங்குடி மக்களின் இயல்புகளையே என் சினிமாவில் பிரதிபலிக்க விரும்புகிறேன்".
ஜானிடம் கடைசிவரை இருந்த வேண்டுகோள் ஒன்றே ஒன்றுதான்.
" எனக்கு சினிமாவின் மூலம் ஒரு சல்லிக்காசு கூட லாபம் வேண்டாம். நான் பசியை ஜெயித்தவன். எனக்கு மேற்கூரை தேவையில்லை. ஆகாயத்தின் கீழ் படுத்துறங்குபவன் நான். நான் இயற்கையின் மைந்தன். புழுதியே எனக்கு இதம். எனக்குத் தேவையெல்லாம் என்னைச் சினிமா எடுக்க அனுமதியுங்கள்"
சாகும்வரை 'நான் ஒரு கம்யூனிஸ்ட்' என்று பெருமையாய்ச் சொல்லித் திரிந்த அந்தக் கலைஞன் சந்தித்த இன்னல்கள் சொல்லி மாளாது.
அவனது 'அக்கிரகாரத்தில் கழுதை' படத்திற்கு சிறந்த மாநிலப்படத்திற்கான தேசிய விருது கிடைத்தது. ஆனால் அப்போதைய எம்.ஜி.ஆர் அரசில் செய்தி விளம்பரத்துறை அமைச்சராக இருந்த ஆர்.எம்.வீரப்பன் 'அந்தப் படம் பார்ப்பனர்களின் மனதைப் புண்படுத்துவதாகக்' கூறி தமிழகத்தில் அந்தப் படத்தைத் தடை செய்தார். "முட்டாள் அமைச்சர், மோசமான சினிமாத் தயாரிப்பாளர்" என்று ஆர்.எம்.வீயை வருணிக்கிறான் ஜான்.
ஒருமுறை மலையாளத்தில் சிறந்த படத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான குழுவில் புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் சக்கரியாவும் இருக்கிறார். சக்கரியாவும் ஜானும் நண்பர்கள். ஜானின் 'அம்ம அறியானும்' விருதுக்கான போட்டிப் பட்டியலில் இருக்கிறது. சக்கரியா தங்கியிருந்த ஓட்டலில் அவரைச் சந்திக்க ஜான் பலமுறை முயற்சி செய்கிறான். ஆனாலும் அது சரியான காரியமில்லை என்பதால் சந்திப்பதைத் தவிர்க்கிறார் சக்கரியா.
கடைசியாக ஜான் ஒரு டீக்கடையில் காத்திருப்பதாக ஒரு ஆள் மூலம் சக்கரியாவுக்குத் தகவல் அனுப்புகிறான். சக்கரியா எரிச்சலோடு ஜானைச் சந்திக்கச் செல்கிறார். அதற்குள் இந்த விசயத்தை எப்படியோ மோப்பம் பிடித்துவிட்ட ஒரு சினிமா நிருபரும் அங்கே அமர்ந்திருக்கிறார். சக்கரியா கோபத்தோடு ஜானிடம் கேட்கிறார், "என்ன வேண்டும்?"
ஜான் சொன்னானாம், "எனக்கு ஒரு இருபத்தைந்து ரூபாய் கிடைக்குமா?" (இந்த இடத்தில் கண்ணீர் திரையிடுவதைத் தடுக்கமுடியவில்லை ஜான்)
ஜான், ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட்டைப் பற்றி ஒரு ஆவணப் படம் எடுத்துப் பாதியிலேயே நிறுத்திவிட்டான். 'கோவலனின் கதையை'த் தமிழில் சினிமாவாக எடுக்க வேண்டும் என்பதும் அவனது ஆசை.
எனக்கு அவன் வாழ்க்கையில் மிகப்பெரிய ஆச்சரியம் அவன் கடைசியாக எடுத்தது பெரியார் நூற்றாண்டு விழாவையொட்டி திராவிடர் கழகத்திற்காக பெரியார் பற்றிய ஒரு விவரணப் படம். ஒரு கலகக்காரன் மற்றொரு கலகக்காரன் பற்றிக் கடைசியாகப் படம் எடுத்துவிட்டுச் செத்துப்போனான்.
ஆம், 1987ல் தன் ஐம்பதாவது வயதில் நண்பர்களோடு மொட்டை மாடியில் குடித்துக்கொண்டிருக்கும்போது கால்தவறிக்கீழே விழுந்து செத்துப்போனான் ஜான்.
http://sugunadiwakar.blogspot.com/2007/01/blog-post_14.html
|