நான் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றபோது நடிகர் சூர்யாவின் புத்தக வெளியீடு நடந்து கொண்டிருந்தது. கையிலிருந்த காமராவால் தூரத்திலிருந்து கிளிக்கிய படங்களில் ஒன்று இதோ…
இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சிக்கு எனது புத்தகங்கள் இரண்டு வெளியாகி உள்ளன. அன்னை மற்றும் கி.மு.
அன்னை - அன்னை தெரசாவின் வாழ்க்கையைக் கவிதை நடையில் சொல்கிறது. கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் ஒரு அற்புதமான முன்னுரை வழங்கியிருக்கிறார்.
கிமு - விவிலியக் கதைகள், விவிலியத்திலுள்ள பழைய ஏற்பாட்டுக் கதைகளை சிறுகதை வடிவில் இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தும் ஒரு முயற்சி. இந்த நூல் அதிக எண்ணிக்கையில் விற்பனையாவதாக தோழமை பதிப்பக உரிமையாளர் என்னைத் தொடர்பு கொண்டு சொன்னபோது மகிழ்ந்தேன்.
‘கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே பிறந்துள்ள இக் கதைகளில் ரியலிசம், மேஜிகல் ரியலிசம், சர்ரியலிசம் போன்ற நவீன கால படைப்புலகின் இயக்கங்களை உணர முடியும். இந்தக் கதைகள் காற்றின் திசையெங்கும் பரவும் வீச்சுக் கொண்டவை. விவிலியக் கதைகளை தனது சிற்ப மொழியில் செதுக்கியுள்ளார் சேவியர்’ என கி.மு நூலின் முன்னுரையில் பத்திரிகையாளரும், எழுத்தாளருமான சுந்தரபுத்தன் குறிப்பிடுகிறார்.

இவற்றை தோழமை பதிப்பகம் (307) மற்றும் சில கடைகளில் காணலாம். தோழமை பதிப்பகத்தில் எனது இயேசுவின் கதை, சேவியர் கவிதைகள் காவியங்கள், மன விளிம்புகளில், கல்மனிதன் போன்ற பிற நூல்களும் விற்பனைக்கு உள்ளன.
http://xavi.wordpress.com/2007/01/17/bookfair/