இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
ஆகாயத்துக்கு அடுத்த வீடு - விருதுக்குத் தகுதியானதா Print E-mail
சேவியர்   


எழுதிக் கொண்டிருந்தான்
விமர்சனங்கள் வந்தன
எழுதாமல் இருந்தான்
விருதுகள் வந்தன.

மேத்தா தன்னுடைய சாகித்ய அகாதமி விருது பெற்ற நூலில் இந்தக் கவிதையை எழுதியுள்ளார். அவர் எழுதியது பொய்க்கவில்லை. தொடர்ந்து இலக்கிய உலகில் இயங்கிக் கொண்டிருந்தபோது வாய்க்காத சாகித்ய அகாடமி விருது இப்போது அவருக்குக் கிடைத்திருக்கிறது. இந்த நூலிலுள்ள கவிதைகள் கடந்த பல ஆண்டுகளாக பத்திரிகைகளில் வெளியான அவருடைய கவிதைகளின் தொகுப்பு. இந்தக் கட்டுரையின் முதல் நான்கு வரிகளில் இருக்கும் கவிதையை மீண்டும் ஒருமுறை வாசித்துப் பாருங்கள். கவிஞரின் வாக்கு பொய்க்கவில்லை என்பது புலனாகும்.

காயம் பட்டவர்களின்
புண்களின் மீது
கவிதை எழுதாதே
தோழா
களிம்பு தடவு

என்று அவர் சமூகத்தின் மீதான அக்கறை பிரதிபலிக்க, எடுத்ததுக்கெல்லாம் கவிதை வடிப்பவர்களைப் பார்த்து கோபத்தில் கொப்பளிக்கிறார். கவிதை நன்றாகத் தான் இருக்கிறது. ஆனால் இந்தக் கவிதை இருக்கும் அதே நூலில் கவிஞர் கோவை வேளாண்மைப் பல்கலைக் கழக மாணவிகள் மூவர் தர்மபுரியில் எரிக்கப்பட்டதையும், குஜராத் கலவரத்தையும், தஞ்சை வறுமையையும், குழந்தைகள் தீயில் கருகியதையும், நடிகை சில்க்.ஸ்மிதா அவர்களின் தற்கொலையையும் கவிதையாய் வடித்துத் தந்திருக்கிறார். கவிதை எழுதாதே என்று சொல்லிக் கொண்டு கவிஞரே கவிதை எழுதுகிறாரே என்று நான் நினைப்பது போலவே நீங்களும் நினைத்தால் கவிஞரைச் சந்திக்கும் போது கேளுங்கள்.

சில காதல் கவிதைகளையும் கவிஞர் இந்தத் தொகுதியில் தந்திருக்கிறார். கம்பன் காவியத்தில் / வாலி வதை/ கண்ணே நீ செய்வது / வாலிப வதை - என்று அவர் குற்றப்பத்திரிகை என்னும் கவிதையில் கசிந்துருகுகிறார். கன்னிமாடம் என்னும் கவிதையில் காதலி பிரிவைப் பற்றி எழுதுகிறார். இதயத்தின் தொலைபேசி என்னும் கவிதையில் ஏழெட்டுப் பக்கத்துக்கு காதலன் காதலியின் தொலை பேசி உரையாடல்களையும், பின் திருமணப் பத்திரிகை நீட்டும் சம்பவத்தையும் ( இன்னுமா ? ) எழுதுகிறார். சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் நான் வாசித்த கவிதைகளின் வாசமே இதிலும். பழையதானதால் கொஞ்சம் தூசு வாசனையடிக்கிறது.

மனிதனுக்கு மதம் பிடிக்கிறது, மதத்துக்கு மதம் பிடிக்கிறது என்றெல்லாம் இன்னும் எத்தனை காலம் தான் கவிஞர்கள் எழுதிக் கொண்டிருக்கப் போகிறார்களோ தெரியவில்லை.

கால்நடைக்குத் / தெரியுமா /கவிதை நடை

என்றும்,

மூக்கைப் பிடித்தபடி / தாக்குப் பிடிக்கிறது / கூவம் நதிக்கரையில்/ கூவ வந்த குயில்

என்றும் சில சின்னச் சின்னக் கவிதைகளையும் கவிஞர் எழுதியிருக்கிறார்.

முக்கியமான கவிதையான ‘ஆகாயத்துக்கு அடுத்த வீடு’ கவிதையைப் பற்றிக் குறிப்பிட்டேயாக வேண்டும். காதலன் காதலி பிரிவுக் கவிதைதான் இதுவும்.

எந்த ஊரில் இருந்தால் என்ன
என் கடிதத்தை நீ
தொட்டவுடன் சிலிர்க்கும் எனக்கு
.
.
நீ பார்த்த பார்வைகளைத்
தொகுத்து வைத்திருக்கிறேன்
ஆல்பமாக
.
என்றெல்லாம் சொல்லிவிட்டு

அவசியம் அனுப்பி வை
உன்
திருமண அழைப்பிதழை

என்று முடிக்கிறார் கவிஞர். இந்தக் கவிதையே நூலின் தலைப்பாகவும் அமைந்து விட்டிருக்கிறது. நூலின் தலைப்பிற்குப் பெருமை சேர்க்கும் என்று நினைத்து ஆர்வமாய் வாசித்த இந்தக் கவிதை கூட ஏமாற்றத்தைத் தருவது சற்று வியப்பளிக்கிறது. குளங்களை எங்கே போய் குளிப்பாட்டுவது, குடைக்கு யார் குடை பிடிப்பது என்பது போன்ற கல்லூரி மாணவர்கள் எழுதிப் பழகும் கவிதைகளும் இந்த தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.

‘ஆகாயத்துக்கு அடுத்த வீடு’ நூலில் இருக்கும் கவிதைகளில் சில ஈர்க்கின்றன. வசதி உள்ளவர் / வழுக்கி விழுந்தால் / குளியல் அறை என்று / கூறுக. பஞ்சை பராரிகள் / வழுக்கி விழுந்தால் / படுக்கை அறை என்று / பகர்க. என்னும் நூலில் வறுமை மக்களின் வாழ்க்கைக் கசப்பை நுட்பமாகக் கூறுகிறார். ஈராக் அழிந்து / சிதைந்த பிறகு தான்/ தெரிந்தது / பேரழிவு ஆயுதங்கள் / எவர் கையில் / இருந்ததென்பது - என்னும் கவிதையில் அமெரிக்காவின் வன்முறைப் போரைக் குறித்த தார்மீக கோபத்தைப் பதிவு செய்கிறார்.

புதுமையான சிந்தனையையோ, புதிய மொழியையோ சுமக்காமல் வெறுமனே முடிவு தெரிந்த துப்பறியும் படம் பார்ப்பது போல பல கவிதைகள் வெறுமனே நீள்கின்றன.

யார் தட்டியபோதும் / திறந்ததே இல்லை / இப்போது ஒவ்வொரு கதவையும் / ஒங்கி ஓங்கித் தட்டி / ஓய்கிற போது / தெரிகிறது. தட்டும் கையின் வலியும் / திறக்காத கையின் திமிரும். என்கிறார் கவிஞர். அவர் எந்தக் ‘கை’ யின் உதவியுடன் தட்டினார் என்பது தெரியவில்லை. ஆயினும் ஒருவழியாகக் கதவு திறந்திருக்கிறது.

கவிஞர் மேத்தாவின் நூல்கள் பத்துக்கு மேற்பட்டவற்றை நான் படித்திருக்கிறேன். கல்லூரி நாட்களில் வியப்பை அளித்த கண்ணீர்ப் பூக்கள் கவிதை நூலைப் போல மேத்தாவின் வேறெந்த நூலும் என்னை ஈர்க்கவில்லை என்றே சொல்வேன் நான்.

கவிஞர் மு. மேத்தா சாகித்ய அகாதமி விருது பெறத் தகுதியுடையவாராய் இருக்கலாம். ஆனால் அவருடைய ‘ஆகாயத்துக்கு அடுத்த வீடு’ அதற்குரிய தகுதியுடன் விளங்குவதாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் இந்தக் கவிதை நூலுக்குக் கிடைத்திருக்கும் சாகித்ய அகாதமி விருது ‘இதுக்கே கிடைக்குதுன்னா நம்ம புக்குக்கும் கிடைக்கும்’ என்னும் ஒரு நம்பிக்கையை தமிழகக் கவிஞர்களுக்கு வழங்கியிருக்கிறது என்பது மட்டும் நிஜம்.

 

http://xavi.wordpress.com/2007/01/20/metha/

 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)