|
முத்துலெட்சுமி
|
"பள்ளிக்கூடம் " எப்போது இப்படிச் சொல்வதை விட்டு மாறினேன். நினைவில்லை. எல்லாரும் ஸ்கூல் என்று தானே சொல்ல ஆரம்பித்து விட்டோம். பள்ளிக்கூடம் என்றால் ஸ்கூலா ஏன் நாம அப்படி வீட்டில் சொல்வது இல்லைன்னு பொண்ணு கேட்கும் போது யோசித்ததில் எப்போது மாறிப் போனதுன்னு தெரியாம சில பழக்கம் ஒட்டிக்கிட்டு இருந்து இருக்கு.
சின்னதுல நாங்க இருந்தது ஒரு கிராமம். எங்க அப்பா கல்லூரியில் ஆசிரியர் . கல்லூரி என்றாலே காட்டுக்குள் தானே, நகரத்தை விட்டு வெளியே. கல்லூரிக்கு அருகில் என்பதால் கிராம வாழ்க்கை. அங்க நேராக ஒண்ணாம் வகுப்பு தான் .
இருந்த ஓரிரண்டு மாடி வீடுகளில் ஒன்றில் வாடகைக்கு, நாங்கள். கம்பி கிராதிகள் வழியாகப் பள்ளி செல்லும் சிறுவர்களைப் பார்ப்பது என் வாடிக்கை. இன்னும் சில மாதங்கள் இருக்கிறது என்ற போதும் நானும் பள்ளிக்குப் போவேன் என்று தினம் தினம் அழுகை. சரி என்று ஒரு 6 மாதம் வயதைக் கூட்டி போட்டு சேர்த்து விட்டார்கள்.
நல்ல நாளும் கிழமையும் பார்த்து கை நிறைய மிட்டாய் குடுத்து எல்லாருக்கும் கொடுத்து நீயும் சாப்பிடு என்று எழுது பலகையோடு பள்ளிக்கூடத்தில் கொண்டு விட்டார்கள் அப்பா. வராண்டாவே கொஞ்சம் களை இல்லாமல் தான் இருந்தது. "சரி அம்மா, அது தான் உன் வகுப்பு போய் உட்கார்" என்று சொன்னார் தலைமை ஆசிரியர்.
பள்ளிக்கூடம் அந்தக் கால கட்டிடம். கோயிலைச் சேர்ந்தது . அதுவும் என் வகுப்பறை இருட்டாக சுவற்றில் செங்கல் எல்லாம் தெரிய ஒரு மாதிரி பயமுறுத்துவதாய்
இருந்தது. சின்ன சன்னல் ஒன்றும் இருந்தது ஆனால் அதன் வழி வெளிச்சம் வரவில்லை. வெளிச்சத்துக்குக் கூரை மேலே ஒரு சதுரக் கண்ணாடி. ஏதோ பி.சி.ஸ்ரீராம் படம் மாதிரி ஒரு வெளிச்சத்தூண் இருட்டு வகுப்புக்கு நடுவில் .
எனக்கு ஒண்ணுமே புரியலை. பக்கத்துல இருக்கறவங்க எல்லாம் கொஞ்சம் உத்து பார்த்தாதான் தெரியறாங்க . (அப்பமே கண்ணு கோளாறு இருந்து இருக்குமோ என்னமோ) . இதுல சுவத்தில இருந்த ஒரு பல்லி மட்டும் சரியாத் தெரிஞ்சிருச்சு. அஞ்சு நிமிடத்திலேயே இடம் நமக்கு கற்பனை செய்த மாதிரி இல்லையேன்னு, அழுது கிட்டே
வெளியே ஓடி, நாலு வீடு தாண்டிப் போன அப்பாகிட்ட, நான் வீட்டுக்கே வரேன்னு சொல்லியாச்சு.
அப்புறம் சமாதனப்படுத்தி, கீழ்வீட்டுப் பொண்ணு, விளையாட்டுத் தோழி சாலா அதே வகுப்பு தானாம். அவ பக்கத்துல உட்கார வச்சுட்டுப் போனாங்க...அதுக்கப்புறம் எப்படியோ ரெண்டு வருசம் அதே பள்ளிக்கூடத்தில் படிச்சு ஒப்பேத்தியாச்சு.
இது என் முதல் நாள் பள்ளி அனுபவம். என் பொண்ணோடது, கதையே வேற. வீட்டில் நானும் அவளுமே விளையாண்டு படித்துப் போரடிச்சுப் போயிருந்த அவளை 3 வயதில் ப்ளே ஸ்கூல் சேர்க்கப்போனோம். அதுக்கு இண்டர்வ்யூவாம்... வீட்டுல எப்போதும் தமிழ் தான். இது தில்லியாச்சே. பேச்சுவழக்கு ஹிந்தியும் தெரியாது ஆங்கிலமும் தெரியாது. போகும் போதே போட்டிருக்கும் வளையல், உடையில் இருந்த பொம்மை எல்லாத்துக்கும் சொல்லிக் குடுத்துக் கூட்டிப் போயிருந்தோம்.
போனதும் மிட்டாய் குடுத்து, உட்கார சேர் போட்டதும் தேங்க்ஸ் சொல்லிட்டா. (தண்ணி குடுத்தா கூட எனக்கே சொல்லுவா.) மத்த கேள்விக்கு எல்லாம் வளையல், முயல்ன்னு ஒரே தமிழ் தான். என்ன இது எப்படி கம்யூனிகேட் செய்வான்னு கேட்ட மேடத்தைப் பார்த்து, என்னங்க பெரிய ஸ்கூல் இண்ட்ர்வ்யூக்கு தயார் செய்யவும் படிக்கவும் தானே இங்க சேர்க்கிறோம் நீங்க தான் பார்த்து தயார் செய்யணும் அப்படின்னு போட்டாச்சு ஒரு போடு. பின்ன வீட்டிலும் வேற மொழின்னா அப்பறம் எப்படி தமிழ் வரும். (ஆமா நாம ஆங்கிலம் சொல்லிக் குடுத்து குட்டிச் சுவர் ஆக்காம இருக்கறதுக்கு ஒரு சாக்கு )
முத நாள் கொண்டு போய் விட்டா என்னைத் திரும்பிப் பார்த்து ஒரு பை கூடச் சொல்லாம மேடத்தைப் பார்த்து குட்மார்னிங் சொல்லிட்டு உள்ளே போயே போய்ட்டா(எனக்குத் தான் அழுகை. வீட்டுக்கு போய்த் தனியா உட்கார்ந்து ஒரே கவலை. கூப்பிடப்போனப்போ என்னம்மா அம்மாவுக்கு ஒரு பை கூட சொல்லாம போயிட்டயேன்னு கேட்டா...ஓ அப்படியா நீ சொல்லவே இல்லையே..மேடத்துக்கு குட்மார்னிங்க் சொல்லச் சொன்னே சொல்லிட்டேன் அப்படிங்கறா.
அம்மா அவங்க எனக்கு தெரிஞ்சதா சொல்லித்தராங்கம்மா. நீ சொல்லிக்குடுத்த பாட்டு(rhymes) எல்லாம் வேகமா பாடினேன். அவங்க நீ கேட்டுக்கிட்டு இரு இவங்களுக்கு சொல்லிக் குடுத்துக்கிறேன்னு சொல்லிட்டாங்களாம். பெருமை தான். தமிழ் பேசினாங்களாம் கிளாஸ் மேடம்.
அடுத்த நாள் கொண்டு விடும் போது மேடம் குட்மார்னிங்க் சொன்னதும் கண்டுக்காம திரும்பி , "அம்மா பை "ன்னு சொல்லிட்டு அப்புறமா அவங்களுக்கு விஷ் பண்ண அழகை என்ன சொல்றது போங்க.
http://sirumuyarchi.blogspot.com/2007/02/blog-post_04.html
|