இந்த இதழில் தொகுக்கப்பட்டிருக்கும் படைப்புகள் ஒரு பூங்காவின ்பல தரப்பட்ட மலர்களின் வேறுபட்ட வனப்பையும், வாசத்தையும் பெற்றிருக்கின்றன. உண்மையில் எல்லா இலக்கியங்களும், படைப்புகளும், இதிகாசகங்களும் பெரும் தொகுப்புகளே அன்றி வேறில்லை. உலகின் பெரும் காவியங்களில் ஒன்றான மகாபாரதத்தின் ஆசிரியர் ஒரு தொகுப்பாளன் (வியாசன்) என்றே அறியப்படுவது எந்த வித்திலும் புதுமையானதல்ல.
"போராளிகள் எதிலும் அழகியலையும் ஒரு வரைமுறையையும் காண்பார்கள். உற்று நோக்கும் பண்பே அவர்களை ஒரு கட்டத்தில் போராளிகளாகவும் மாற்றி விடுகிறது" என்ற கூர்மையான அவதானிப்போடு தொடங்கிற, "சந்தனத் தெருக்களில் கந்தகம் மணக்கையில்" என்ற மலைநாடானின் கட்டுரை, பக்திப்பாடல்களை பரவசத்தோடு பாடி மகிழ்ந்த கவிஞன் மக்கள் எழுச்சிப் பாடல்களை பாடுகிறவனாக மாறியதைப்பற்றி பேசுகிறது. பாக் நீரிணைப்பில் யாரும் அறியாமல் மூழ்கிபோகும் தமிழர்களின் சோகத்தைச் சொல்லுகிறது "என் தீவிருந்து புறப்பட்ட டைட்டானிக்" என்ற அவரது இன்னொரு கட்டுரை. முழுமையான கல்வி, தொழில்நுட்ப கொள்கை இல்லாத காரணத்தால், இன்று கல்வியின் தரம் வேண்டிய அளவு உயராமல், முழுமையாக கடைநிலை மக்களைப் போய் சேராமல் இருக்கும் அவலத்தைப் பற்றி பேசுகிறது மங்கையின் 'எல்லாரும் படிக்கனும்னா..." என்ற கட்டுரை. தமிழின் வார்த்தை வளங்களை சோம்பலாலும், முயற்சியின்மையாலும் பெருக்கிக் கொள்ளாமல் "தமிங்கிலம்" என்ற புதிய நோயை விரும்பி உருவாக்கி வளர்த்து வரும் தமிழ்ச்சமூகம் பற்றி இராம.கியின் ஆதங்கம் " தமிங்கிலம் என்னும் ஒரு நோய்" என்ற அருமையான கட்டுரை இந்த இதழை அழகு செய்கிறது.
உடல்நலவாரமாக அனுசரிக்கப்படும் இவ்வாரத்தில் பூங்காவில் சிக்குன் குனியா பற்றிய இரண்டு பதிவுகள் வெளியாகி இருக்கும் வேளையில் பத்மா அரவிந்திடம் இருந்து இவ்விதழுக்காக வேண்டிப்பெறப்பட்ட "உயர் இரத்த அழுத்தம்" என்ற கட்டுரை அது தொடர்பான அருமையான தகவல்களை அளிக்கிறது. அணுப்பிளவைப்பற்றிய சீனிவாசன் கிருட்டிணசாமியின் கட்டுரையும், தொல்லியலை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட இயற்கையை நேசியின் கட்டுரையும் அறிவியல் பக்கங்களை நிறைவு செய்கின்றன. தமிழ் கணிமை தொடர்பான கட்டுரைகள் தொழில் நுட்பம் பகுதியில் வந்துள்ளன.
தவிர அசோகமித்திரனுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வாசனின் கட்டுரையும், மொன்றியலில் சமீபத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடினை ஒட்டி எழுதப்பட்ட பொடிச்சியின் கட்டுரையும் பதிவுகள் தமது காலத்தை ஒட்டி எழுந்த எழும் இருவிதமான சிந்தனைத் தேவைகளைக் காட்டுகின்றன. ஸ்ரீரங்கனின் ஆனந்தசங்கரியை பற்றி எழுதப்பட்ட கட்டுரை மாற்றுத் தமிழர் தலைமை ஒன்றை திணிக்கும் மேலாதிக்க அரசியல் முயற்சிகளைப் பற்றி பேசுகிறது.
"எத்தனை அழுதாலும் புரண்டாலும் இத்தனை மணிவரை இந்த இடத்தில் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பணிக்கப் படுகிறோம். நினைத்துப் பார்க்கமுடியாத வன்முறை நம்மீது பிரயோகிக்கப்படுகிற நாட்கள் அவை" என்று குழந்தை பருவத்தை பலியெடுத்து சமூகம் நிகழ்த்தும் வன்முறை எழுதுகிறார் அருள்குமார். நா. கண்ணன் சுஃபி இசைபற்றி குறிப்பையும், சுட்டியையும் தருகிறார்; தமிழீழ திரைப்படம் 'ஆணிவேர்' பற்றி அறிமுகப்படுத்துகிறார் பிருந்தன்.தவிர, பல கவிதைகளும், சிறுகதைகளும் , நிகழ்வுக் குறிப்புகளும் அடங்கிய தொகுப்பாக வெளிவந்திருக்கிறது இவ்வார பூங்கா. இவ்விதழ் குறித்த வாசக அனுபவங்களை நீங்கள் ஆசிரியரிடம் பகிர்ந்துகொள்ள
This email address is being protected from spam bots, you need Javascript enabled to view it
க்கு நீங்கள் எழுதலாம்.
|