|
சிந்தாநதி
|
ஒரு விதத்தில் நல்ல புத்தகங்கள் நல்ல மனிதரை உருவாக்குகின்றன என்பது சரி...நல்ல புத்தகங்கள் எவை என்பது தான் கேள்வியே. சும்மா எழுதப் படும் புத்தகங்களெல்லாம் நல்ல புத்தகங்களல்ல. நல்ல புத்தகங்கள் வாசிக்கக் கிடைப்பதும் ஒரு வகையில் அதிட்டம் சார்ந்த விதயமாகிப் போனது. அந்த வகையில் என்னை உருவாக்க உதவிய நல்ல புத்தகங்களும் எனக்குக் கிடைத்தன.
குறிப்பாக பெண்ணடிமைத்தனம் குறித்த தெளிவான பார்வை எனக்கு ஆரம்பத்திலேயே கிடைத்தது. குறிப்பாக பல வங்காள மொழிபெயர்ப்பு நூல்கள் இயல்பான வாழ்வியல் சூழலும் பெண்ணியப் பார்வையும் கொண்டு பல புரிதல்களைத் தந்திருந்தன. புத்தகங்களின் பெயர்கள் எனக்கு இப்போது நினைவில்லை. பல புத்தகங்கள் எண்பதுகளில் தூத்துக்குடி நகர நூலகத்திலிருந்தும், புதுக்கோட்டை மன்னர் கல்லூரி நூலகத்திலிருந்தும் வாசித்தவை.
என் நண்பர்களில் என்னை அதிகம் அவனது ஆளுமைக்குள் வைத்திருந்த ஒரு நண்பன் மிகப் பயங்கரமான ஆணாதிக்கவாதி. வேறு எந்த விதயத்திலும் அவனுக்கு பதிலடி கொடுக்க முடியாத அளவுக்கு பேச வல்லவன். ஆனால் இந்த ஒரு விதயத்தில் மட்டும் அவனை எதிர்த்து வாயாட எனக்கு கருத்துகள் இருந்தன. ஆனாலும் அவன் கடைசியாக தோற்று விடும் நிலையில் ஒன்றைச் சொல்லி எழுந்து போவான். நீ..ஒரு சிசு..உனக்கு அனுபவம் போதாது...
பெண்கள் எல்லாம் காமவெறி பிடித்து அலைபவர்கள். எப்போது சமயம் கிட்டும் என்று காத்திருப்பவர்கள். கணவன் சற்று ஏமாந்தால் மனைவி அவனை ஏமாற்றி விடுவாள். இதுதான் அவனது பெண் பற்றிய பார்வை.
அவனுக்கு ஒரு தங்கை. அவளை வீட்டுக்குள் அடைத்தே வைத்திருந்தார்கள். நண்பர்கள் யாராவது அவனது வீட்டுக்குப் போனால் தங்கையை முதலில் அவளது அறைக்குள் அனுப்பி விட்டுத்தான் நண்பர்களைச் சந்திப்பான். நண்பர்களைப் பெரும்பாலும் வாசலில் வைத்தே அனுப்பி விடுவான். இத்தனைக்கும் அவனது நண்பர்கள் யாருமே ஜொள்ளுப் பார்ட்டிகளல்ல. அவர்கள் அப்படி இல்லா விட்டாலும் பெண்கள் கையைக் கண்ணைக் காட்டி மயக்கி விடுவார்களாம்.
வயதுக்கு வந்தவுடன் அவளது படிப்பை நிறுத்தி விட்டார்கள். பின்னாளில் அவனது தந்தை நோய்வாய்ப்பட்டு இந்த நண்பன் குடும்பத்தைக் கவனிக்க வேண்டிய நிலை வந்த போது நண்பன் அவர்களைக் கைவிட்டு வீட்டை விட்டுப் போய்விட்டான். பின்னர் அந்தக் குடும்பத்தின் மீது அன்பும் அந்தப் பெண்ணின் படிப்பார்வமும் கண்ட அவளது ஆசிரியை ஒருவர் அவளை அழைத்துக் கொண்டு போய் விடுதியில் சேர்த்துப் படிக்க வைத்தார். பெண்ணுக்கு ஒரு வேலையும் வாங்கிக் கொடுத்தார். அதன் பிறகு பெற்ற தாய் தந்தையை அந்தப் பெண்ணே காப்பாற்றி வந்தாள். பிறகு அவளுக்கு திருமணம் செய்விக்க யாரும் இல்லாத நிலையில்...
இந்த அவலம் கண்டு படிப்பில் உதவி புரிந்த ஆசிரியையே ஒரு பையனைப் பார்த்து திருமணம் செய்வித்தார். அந்தப் பெண் இப்போது நன்றாக இருக்கிறாள். பெற்றோரையும் அவள்தான் பராமரித்து வருகிறாள்.
இப்போது நான் அந்த (முன்னாள்) நண்பனைப் பார்க்க நேர்ந்தால் என்ன கேட்கலாம்?
யார் சிசு..என்பதை அவனுக்கு விளக்கி இருக்கலாம். ஆனால் அவன் தான் தப்பித்துப் போய்விட்டானே?
-oOo-
ஒரு மகளாக தகப்பனுக்கு அடிமையாக, தங்கையாக அண்ணனுக்கு அடிமையாக, பல சமயங்களில் தம்பிகளுக்கே அடிமையாக, பின்னர் கணவனுக்கு அடிமையாக, வாழ்விறுதியில் பெற்ற மகனுக்கே அடிமையாக வாழ்பவள் பெண். படிப்பறிவும் பொருளாதார மேம்பாடும் எந்த அளவுக்கு பெண்ணை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்திருக்கிறது? பல பெண்களின் குடும்பச் சூழல் இன்னும் அடிமைத்தனத்தைப் பேணி வருவதாகவே இருந்து வருகிறது. மீறல்களினால் சில பெண்கள் வெளியே வந்திருக்கலாம். இன்றைய சூழல் அறிந்து பல ஆண்களும் மாறி வருகிறார்கள்.
வளர்ந்த குழந்தைகளைக்கூட விட்டு விட்டு சில பெண்கள் கள்ளக் காதலனுடன் ஓடிப் போனதாக செய்தி வருகிறது. காமத்துக்காக என்று மிகச்சுலபமாக அதை சமூகம் விமர்சிக்கிறது. காமத்துக்காக 100 ஆண் அதே தவறைச் செய்யும் போது 1 பெண் செய்வது பெரிதாக விமர்சிக்கப் படுகிறது. பெண்கள் தவறே செய்யாதவர்கள் அல்ல. ஆனால் ஆண் செய்யும் தவறுகளுக்கு முன்னால் அவை தூசுக்குச் சமம்.
ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் சொன்னார். "இப்போது 100க்கு ஒன்று என்று நீங்கள் சொல்வது அதிகமாகி விடக்கூடாது என்பதற்காகவே பெண்களுக்கு சில கட்டுப் பாடுகள் விதிக்கப்படுகின்றன"
அந்த நூறைக் குறைப்பதற்கு நீங்கள் என்ன கட்டுப்பாடுகள் விதித்திருக்கிறீர்கள் ஐயா? ஒன்று பெரிதாகி விடக்கூடாது என்று நினைக்கும் நீங்கள் நூறைக் குறைப்பதற்கு எந்த முயற்சியும் செய்ய மாட்டீர்கள் அப்படித்தானே?
(கணித ரீதியாக நூறு கீழ்நோக்கிக் குறைந்தால் தானாக சதவீத அடிப்படையில் ஒன்று மேல்நோக்கிப் பெரிதாகி விடும் என்ற அக்கறை போலும்..)
இதற்கும் பெண்ணுரிமைக்கும் தொடர்பு இல்லை என்ற போதும் பெண்ணடிமைத் தனத்திற்கும் இதற்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது. பத்துப் பெண்களோடு தொடர்பு வைத்திருக்கும் ஆண் கூட திருமணத்திற்குக் கன்னிப் பெண்தான் வேண்டும் என்கிறான். இவன் பத்துப் பெண்களை நாசமாக்கியது பற்றி எந்தக் கவலையும் இல்லை.
எந்தப் பெண்ணும் வரப்போகும் கணவன் கற்புள்ளவனா என்று ஆராய்ந்ததாக விவரம் இல்லை...
நமது சினிமாவும் இதே அடிமைத்தனத்தை இன்னொரு விதமாகப் பறைசாற்றி வருகிறது. பெண்ணைக் கேலி செய்து பாடும் அதே ஆண்களுடன் அரைகுறை ஆடையில் பெண் குத்தாட்டம் போடுவதும், கதாநாயகிகள் நாயகர்களைத் துரத்தித் துரத்திக் காதலிப்பதும் நாயகன் கடமையே கண்ணாக இருப்பதும்... என்னாங்கடா வெளையாடுறீங்களா?
http://valai.blogspirit.com/archive/2007/03/08/woman.html
|