வரலாற்றிலே வடமராட்சி மக்களுக்கு கறைபடிந்த அந்த நாட்கள் வசந்தகாலம் தழுவும் 1987ம் ஆண்டு வைகாசி மாதம் கோயில்கள் கொடியேறி விழாக்கோலம் பூணும் காலம். ஆனால் எம்மூரில் மகிழ்சி இல்லை எங்கும் அழு குரல்கள் எங்கள் வீடும் அதற்கு விதிவிலக்கல்ல ஆமாம் அப்பா இறந்து விட்டாரோ என சந்தேகம். ஆனால் உடலம் கிடைக்க வில்லை. இதற்குக் காரணம் விடுதலைக்கான செயல் வடிவம் என்வழங்கப்பட்ட வடமராட்சி மீதான இராணுவத்தின் படையெடுப்பே தொண்டைமனாறு போன்ற முன்னரங்க நிலைகளில் மட்டும் சிறு எதிர்ப்பைக் காட்டிய விடுதலைப் புலிகள் பின் எங்கே ஓடி மறைந்தனர்.
இதை ஏதும் அறியாதவராக நாமும் எம்மூர் மக்கள் சிலரும் தம் பாதுகாப்புக்காக தாம் வெட்டி வைத்திருந்த பதுங்கு குழிகளில் ஒளிந்து இருந்தனர். ஆனாலும் எமக்கு வந்த அதிஸ்டம் எம்மூர் விடுதலைப்புலி உறுப்பினர் வந்து இராணுவத்தினர் மிக நெருங்கி விட்டார்கள் எனவும் எங்களை வேறு எங்காவது செல்லமாறும் எங்களுக்கு பணிக்கவே நாங்கள் வீட்டை விட்டு வெளியேறி பருத்துறை சென்றடைந்தோம் ஆனால் எமது தந்தையோ தான் பொலிஸ் அதிகாரி என்கின்ற அசட்டுத் தைரியத்தில் வீட்டிலையே இருந்து விட்டார் நாங்கள் பருத்துறையில் இருந்து திரும்பி வந்து பார்த்த போது ஊரே சுடுகாடாகி கிடந்தது. அங்கங்கே பல பிணங்கள் எங்கும் எரித்து உருக்குலைக்கப்ட்ட பிணங்கள். அவற்றையெல்லாம் அடையாளம் காணும் முயற்சியில் எல்லாம் விட்டுவிட்டு இளைஞர்கள் அவற்றையெல்லாம் அந்தந்த இடங்களில் போட்டு எரித்தனர். பலர் உறவுகள் இறந்து விட்டார்கள் எனக் கருதியே அனைத்தையும் செய்தனர். நாமும் அப்படியே செய்தோம். ஆனால் சமய சடங்குகள் செய்யுமளவில் யாரும் இல்லை. ஒருவனை ஒருவன் தேற்ற முடியாத நிலை எல்லோர் வீட்டிலும் சவக்கோலம் இப்படியாக 5 மாதங்கள் ஒடிப்போயின. அன்றொரு நாள் ஒரு கடிதம் எங்களுக்கு வருகிறது.
ஆம் அது என் அப்பாவிடம் இருந்துதான். தான் பூசா தடுப்பு மூகாமில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், தான் அங்குள்ள வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் எழுதியிருந்தார். பின் அம்மா பொலிஸ் திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு அப்பா மீட்கப்பட்டார். அப்பாவைக் காணாத நாங்களும் நாங்கள் உயிரோடு இருக்கிறோமா என்று சந்தேகத்தோடு வாழ்ந்த அந்த மூன்று மாதம் எங்களுக்கு இரத்தக் கறை படிந்த நாட்களே.
இதுதான் எனது முதலாவது ஒலிப்பதிவு ஆதலால் குரலில் சில தடுமாற்றங்கள்.
இனிவரும் பதிவுகளில் சிறப்பாக அமைக்க முயற்சி செய்கிறேன் உங்கள் ஆதரவையும் எதிர் பார்க்கிறேன்