அன்று ஞாயிற்றுக்கிழமை________
வழக்கம்போல பென்ஸ் மாமா மற்ற உ.பா பிரியர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி ஏற்பாடுகளை தடபுடலாக கவனித்துக்கொண்டார். லண்டனில் செட்டில் ஆகிவிட்ட சென்னைத்தமிழரை சந்திப்பதாக ஏற்பாடு. தெரியாத்தனமாக பென்ஸ் மாமாவுக்கு
அவர் வரப்போகும் விஷயத்தை முன் கூட்டியே உளறி விட்டேன். அவரும் ட்யூட்டி
ப்ரீ ஷாப்பில் உ.பா வாங்கி வருமாரு நண்பருக்கு அன்புக் கட்டளையிட்டுவிட்டார்.
நண்பரும் சிரித்தபடியே வாங்கி வருவதாக உறுதியளித்து விட்டார். அந்த
சரக்குகளுக்கு உற்சவம்தான் இன்று.
மகாபலிபுரம் கடற்கரைச் சாலையில் உள்ள ஒரு ரிசார்ட்டில் சந்திப்பதாக
ஏற்கனவே முடிவு செய்திருந்தார்கள். பெரும்பாலும் இது போன்ற குடிமகன்களுக்கு
மத்தியில் கும்மி அடித்துப் பழகி விட்டதால் தவிர்க்க முடியவில்லை. பென்ஸ்
மாமா காலையிலேயே குளித்து முடித்து பட்டையடித்து வந்திருந்தார். இது
போன்ற மேட்டர்களுக்கு ஒரு அதீதமான ஆர்வம் காட்டுவது இவரின் வழக்கம். அதுவுமில்லாமல் வந்திருப்பது வெளிநாட்டு சரக்கல்லவா அதுதான், மனிதர்
நிகழ்ச்சி அமைப்பாளர் ரேஞ்சுக்கு அளப்பறை கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
பூஜைக்கு காண்டிராக்டர் சுப்பிரமணியம், போலீஸ் உயரதிகாரி பெயர்
குறிப்பிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார் (கண்ணியமாம்),
வெளிநாட்டுக்கார் டீலரான சண்முகம், இன்கம்டாக்ஸ் அதிகாரி குலசேகரன்
ஆகியோர் வருவதாக பென்ஸ் மாமா முன்பே சொல்லியிருந்தார்.
சரியாக பத்து மணிக்கு கிளம்புவதாக ஏற்பாடு. என்னை ஏகத்திற்கும்
விரட்டிக் கொண்டிருந்தார், இதற்கிடையில் பங்சுவாலிட்டி அட்வைஸ்
வேறு. படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை மூடிவைத்துவிட்டு கிளம்பினேன்.
கண்ணியமான அந்த அதிகாரி பிக்கப் செய்து கொள்வதாகச் சொல்லி இருந்தார்
அதற்காக காத்திருக்கும்போது எங்களைக் கடந்து இரு இளம்பெண்கள்
கடந்து சென்றனர்.
ஏம்பா கந்துமணி இப்போ போனாங்களே ரெண்டு பேரு, அவங்கள பாத்தியா?
பென்ஸ் மாமா கேட்டார்.
"பாத்தேனே"
எப்படி தோணுது?
எப்படி தோணுதுன்னு ஏன் எங்கிட்ட கேக்கறிங்க?
"அட, சும்மா சொல்லுப்பா"
"சரியா கவனிக்கலயே"
நம்மள கடந்து போன அந்த ரெண்டு செகண்ட்ல நான் கவனிச்ச
விஷயத்த சொல்றேன் கேளு.
போனவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆயிடுச்சி ஆனா தாலியை
மறைச்சிருக்காங்க. இடப்பக்கம் போனாளே அவளுக்கு வயது 29 இருக்கலாம்
அவள் அணிந்திருந்த ஜீன்ஸ் இந்தியத் தயாரிப்பல்ல. தங்க நிறத்துல கேசம்
இருக்கறதப் பாத்தா மாதத்துக்கு இருமுறையாச்சும் அழகு நிலையத்துக்குப்
போய் கலரிங் பண்ணிக்குவாங்க போலருக்கு. உனக்குத் தெரியுமா? இரண்டு
வாரங்களுக்கு ஒருமுறை நகத்தை அழகுபடுத்தறதுக்கு மட்டுமே 200 ரூபாய்
செலவு பண்றாங்களாம் பொண்ணுங்க. அந்த மாதிரி அவள் நகத்தை ஒழுங்கு
படுத்தி நளினமா வெச்சிருக்கா. கல்யாணமாகி சுமார் ரெண்டு மூணு வருசம்
ஆகியிருக்கலாம். ஆனா இன்னும் குழந்தை பெத்துக்கல. ஏதாவது பன்னாட்டு
கம்பெனில வேலை செய்றவளா இருக்கலாம். அவள் போட்டிருக்கற செண்ட்
டெர்ரிக் உமன் அமெரிக்கத் தயாரிப்பு....
சொல்லிக்கொண்டே போனவரை கையமர்த்தினேன்.
எப்படிங்க இவ்வளவு நுணுக்கமா கவனிச்சிங்க?
"அதான் பென்ஸ் _______"
இரண்டு நொடிகள் கடந்து போனதுக்கே இவ்வளவு சொல்றாரு. அஞ்சு நிமிஷம்
பேசினா ஜாதகத்தையே புட்டு புட்டு வெச்சிடுவாரு போல. மனிதரின் கண்,
புத்திக்கூர்மையை நினைத்து வியந்து போனேன்.
இல்லையா பின்ன!
சொன்னவர்கள் சொன்ன நேரத்திற்கு வந்தார்கள் இது போன்ற விஷயங்களில்
நேரத்திற்கு வருவதில் வெள்ளையர்களுக்கு சவால் விடுவார்கள் இவர்கள்.
ரிசப்ஷனிஸ்ட் பெண்ணிடம் வழிந்து கொண்டிருந்த மாமாவை இழுந்து வராத
குறையாக இழுத்து வந்தார் லண்டன் நண்பர். மிஸ்டர் கண்ணியம்
பிரிய மனமில்லாம திரும்பித் திரும்பி பார்த்துக்கொண்டே வந்தார்.
வீட்டில் மனைவி கைப்பட செய்த தூள் பக்கோடா, முந்திரிப்பருப்பு (நெய்யில்
வறுத்தது), மிளகு வடை, மசாலாப் பொரி ஆகியவற்றைக் கடைபரப்பி வைத்தார்.
இது போன்ற சமயங்களில் கடைகளில் கிடைக்கும் கண்ட கண்ட சைட்
டிஷ்களில் டேஸ்ட் இருக்காது என்று வீட்டிலிருந்து எடுத்து வரும் பழக்கம்
உடையவர் திருவாளர் கண்ணியம். அவருடை மனைவிக்கும் வெளியில்
சாப்பிடுவது பிடிக்காதாம்.
பூஜையை ஆரம்பித்திருந்தனர். ஒயிட் ரம், ஸ்காட்ச் விஸ்கி, ப்ளாக் லேபிள்
ஸ்வியோன் ப்ளோங்க் போன்ற மதுவகைகளை உ.பா பிரியர்களுக்கு
"பரிசளிக்க" வாங்கி வந்திருந்தார்.
பென்ஸ் மாமாக்கு நாக்கில் எச்சில் ஊறியது போலும் பூஜையை உடனே
துவக்குமாறு காளைகளை முடுக்கி விட்டார். அவரவர் தத்தமது கோப்பைகளில் ஊற்றிக்கொண்டு உற்சாக உலகத்திற்குச் செல்ல ஆயத்தமாயினர்.
நண்பரிடம் லண்டன் அனுபவங்களைச் சொல்லுமாறு வேண்டினேன்.
பொருளாதாரம், தமிழ்மக்களின் விருந்தோம்பல், என்று பேச்சு போனது
இடையில் பென்ஸ் மாமா தன் துறை சார்ந்த கேள்வியொன்றை வழக்கம்
போல வீசினார்.
லண்டனில் வளரும் தமிழ்ப்பெண்களின் கலாச்சாரம் எப்படிப்போகிறது?
உடை, நடை, எல்லாவற்றிலும் இந்தியத்தன்மை இருக்கிறதா
அல்லது அங்கேயே பிறந்து வளர்ந்ததால் மேற்கத்திய பாணி இருக்கிறதா?
லண்டனில் இருவகையான பெண்களைக் காணமுடியும், ஈழத்துத் தமிழ்ப் பெண்கள்,
தமிழ்நாட்டு தமிழ்ப்பெண்கள் அனைவருமே அங்கத்திய நாகரீகத்தில்தான் வாழவிரும்புகிறார்கள். சாதாரணமாக பெண்களை பப்களிலும், பார்களிலும்
காணலாம். சென்னையில் கூட பார்த்திருக்கிறேன்.
"எனக்குள் தோன்றியது சென்னையில் கூட வளர்ந்து விட்டதா"
என்னங்க ஒரே குழப்பமா இருக்கா?
"மேலே உள்ளது நான் எழுதினதுதான்"
ஆனால் நம்மிள் பலரும் பல வருடங்களாக இது போன்ற கட்டுரையினை
படித்திருக்கலாம். நான் கூட சிறுவயதில் இருந்தே படித்து வந்தேன்.
எங்கப்பா சொல்வாரு. டேய் உனக்கு படிப்புதான் ஏறமாட்டேங்குது அதனால
தினசரிகள படிக்குற பழக்கத்தை வளர்த்துக்கோ. அட்லீஸ்ட் நாட்டு நடப்பாச்சும்
தெரிஞ்சுக்க வசதியா இருக்கும்னு. அப்போதான் ஆரம்பிச்சது இத படிக்கும் பழக்கம். ஞாயிற்றுக்கிழமை இலவச இணைப்பாக வரும் அதில் நான் விரும்பி பார்ப்பது
குறுக்கெழுத்து போட்டிதான். நிரப்புவதில் இருக்கும் ஆர்வம் அனுப்புவதில்
இருந்ததில்லை.
இவங்க எங்கிட்டாச்சும் போய் கும்மாளம் அடிச்சுட்டு வருவாங்களாம் அதை
அப்படியே தைரியமா பத்திரிக்கையில வேற எழுதுவாங்களாம். இதுல பெரிய
பெரிய அதிகாரிங்களும், காவல்துறையை சேர்ந்தவங்களும், ரவுடிகளும் அருகருகே
அமர்ந்து அருந்துவாங்களாம்.
அட நாட்டுல எவந்தான் ஜாலியா இல்ல எல்லா உரிமையும் இருக்குதான். ஆனா
அதை ஏன் நாலு பேரு படிக்குற எடத்தில ஏன் எழுதறாங்கன்னு தெரில. வயதில்
சிறியவர்கள் படிச்சாங்கன்னா இது போன்ற செயல்கள் தவறே இல்லன்னு
முடிவுக்கு வந்துடுவாங்க.
பெரிய காமெடியே கேள்வி பதில்தான், அங்குட்டு கேக்குற கேள்வி
எதுவுமே விளங்குற கேள்வியா தெரியாது. படிக்க படு காமெடியா இருக்கும்.
"அந்த" மாதிரி சர்வே ஒண்ணு சொல்லுங்க சார்னு ஒரு கேள்வி கண்டிப்பா
இருக்கும். (எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட்டு இந்த மாதிரி கேள்விய இவங்களே
கேட்டுக்கறாங்கன்னு)
சரி இப்ப எதுக்குடா இந்த மாதிரி கொசுவர்த்தி சுத்திட்டு இருக்கேன்னு கேக்கறிங்களா
ஏதோ தோணுச்சு எழுதறேன்.
காமெடி காமெடி காமெடி மட்டுமே!!
http://umakathir.blogspot.com/2007/03/blog-post_7631.html
|