|
சிறப்பு ஒலிப்பேழை - இசைத்தமிழ். பகுதி-4 |
|
|
|
முனைவர் இரா. திருமுருகன்
|
இசைத்தமிழ் சிறப்பு ஒலிப்பேழையை நமக்களித்த முனைவர் இரா. திருமுருகன் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு:
முனைவர் இரா. திருமுருகனின் இயற்பெயர் இரா. சுப்பிரமணியன். மார்ச் 16, 1929ல் புதுவை மாநிலம் கூனிச்சம்பட்டு கிராமத்தில் பிறந்தவர். மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் பெற்ற பண்டிதம் தொடங்கி சென்னைப் பல்கலைக் கழகத்தில் பெற்ற முனைவர் பட்டம் வரை இவர் பல பட்டங்களைப் பெற்றுள்ளார். இவர் இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாழும் தமிழறிஞர்களில் குறிப்பிடப்படும் தகுதியினைப் பெற்றவர். பல சிறப்புப் பட்டங்களையும், விருதுகளையும் தனது தமிழ்ப்பணிக்காகப் பெற்றவர். தமிழின் மீதிருந்த பற்றின் பொருட்டும், தமிழில் கையெழுத்து குறித்த அரசாணையை நடைமுறைப்படுத்தாததை முன்னிட்டுத் தன் அதிருப்தியைத் தெரிவிக்கும் பொருட்டும் தனக்குக் கிடைத்த தமிழ்மாமணி விருதையே திருப்பியளித்தவர். தமிழோடு பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவர். நாற்பது ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது தமிழ்நாட்டரசின் புதிய தமிழிலக்கணக் குழுவின் உறுப்பினர், சென்னைப் பல்கலைக் கழக இசைத்துறைப் பாடத்திட்டக்குழு உறுப்பினர் போன்ற பல பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு அயராது தமிழ்த்தொண்டாற்றியும், தமிழ்நலம் கெடும் இடங்களிலெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்தும் வருபவர். பள்ளித் தமிழ்ப் பாடநூல்கள், மாணவர் பயிற்சி ஏடுகள் ஆகிவற்றை வடிவமைக்கும் குழுக்களில் வழிகாட்டியவர். புதுவை அரசின் தமிழ் வளர்ச்சிச் சிறகத்தின் தனி அலுவலராகப் பணிபுரிந்தபோது பல சீரிய தமிழ்ப்பணிகளை நடத்தி வைத்தார். தமிழ் வளர்ச்சி நடவடிக்கைக் குழுவின் தலைவராகவும் பணியாற்றி மக்களிடையே தமிழுணர்வைப் பரப்பப் பாடுபட்டார். பணி ஓய்வு பெற்றபோது தனக்குக் கிடைத்த தொகையைக் கொண்டு தமிழன்பர்கள் தமிழ்ப்பணி அறக்கட்டளையைத் தோற்றுவித்து அதனை நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளையின் மூலம் இலக்கணக் கூட்டங்களையும், கருத்தரங்குகளையும், தெளிதமிழ் என்ற மாத இதழையும் நடத்தி வருகின்றார்.
பாடநூல்களைத் தவிர 1957 முதல் 2005 வரை இவர் எழுதிய நூல்கள் 35. அவை:
இலக்கணம்:
1. நூறு சொல்வதெழுதல்கள்
2. இனிக்கும் இலக்கணம்
3. கம்பன் பாடிய வண்ணங்கள்
4. இலக்கண எண்ணங்கள்
5. பாவேந்தர் வழி பாரதி வழியா?
6. சிந்து இலக்கியம்
7. சிந்துப் பாடல்களின் யாப்பிலக்கணம் (முனைவர் பட்ட ஆய்வேடு)
8. சிந்துப் பாவியல்
9. மொழிப் பார்வைகள்
10. பாவலர் பண்ணை
11. மொழிப் புலங்கள்
12. இனிய தமிழில் பிழையின்றி எழுத எளிய வழிகள்
13. பாவாணர் கண்ட இன்றைய தமிழின் இலக்கணங்கள்.
மொழி வளர்ச்சி:
14. என் தமிழ் இயக்கம்-1
15. என் தமிழ் இயக்கம்-2
16. தாய்க்கொலை
17. என் தமிழ் இயக்கம்-3
18. என் தமிழ் இயக்கம்-4
19. என் தமிழ் இயக்கம்-5
20. எருமைத் தமிழர்கள்
21. இன்றைய தமிழர்கள் மொழிப்பற்று உள்ளவர்களா?
22. மொழிப்பற்று இல்லாத தமிழர்கள்
23. என் தமிழ் இயக்கம்-6
இலக்கியம்:
24. இலக்கிய எண்ணங்கள்
25. புகார் முத்தம்
26. கற்பு வழிபாடு
பாடல்:
27. ஓட்டைப் புல்லாங்குழல்
28. கம்பனுக்குப் பாட்டோலை
29. பன்னீர் மழை
30. வள்ளுவர் வலிமை மிக்கதாகக் கருதுவது அருளையா? பொருளையா?
இசை:
31. பாவேந்தரின் இசைத் தமிழ்
32. இசுலாம் வளர்த்த இசைத் தமிழ்
33. ஏழிசை எண்ணங்கள்
34. சிலப்பதிகாரம்-தமிழன் படைத்த கருவூலம்
வரலாறு:
35. புதுச்சேரி பாண்டிச்சேரியுடன் போராடுகிறது
இசைத் தமிழ் என்ற சிறப்புச் சொற்பொழிவினை நமக்காக அளித்தமைக்காக இத்தனை சிறப்புக்களையுமுடைய முனைவர் இரா. திருமுருகன் அவர்களுக்கு பூங்காவின் அன்பர்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த நான்காவது பகுதியுடன் "இசைத்தமிழ்" சொற்பொழிவு பூங்காவில் நிறைவு பெறுகிறது. இது குறித்த உங்களது கருத்துக்களை எங்களோடும், முனைவர் இரா. திருமுருகன் அவர்களோடும் (ஏழிசைச் சூழல், 62 மறைமலையடிகள் சாலை, புதுச்சேரி-605001, தொலைபேசி-0413 2201191) பகிர்ந்து கொள்ளலாம்.
|