|
தொகுப்பாளரின் மேசையிலிருந்து |
|
|
|
ஆசிரியர் குழு
|
இந்தியா விவசாயிகளின் நாடு என்றும், விவசாயிகளே இந்நாட்டின் முதுகெலும்பென்றும் சொல்லப்பட்டு
வருகிறது. வழக்குகளாலும், வறட்சியாலும் நீரற்றுப்போன ஆறுகளாலும், வேறு தொழில்களுக்குக் கிடைக்கும் ஊக்கம்
விவசாயத்திற்குக் கிடைக்காத நிலையிலும், பெருவாரியான கிராமத்து மக்கள் நகர்களை நோக்கித் தொடர்ந்து
நகர்ந்துகொண்டிருப்பதாலும் பல கிராமங்களில் தரிசு நிலங்கள் பெருகிக்கொண்டு வருகின்றன. நகருக்குச் சென்ற
மக்களின் நிலையும், உழைக்கும் மக்களை இழந்த கிராமத்தின் நிலையும் பெரும் சமூக, பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியன. வறட்சியைக் காரணம் காட்டி நிலத்தைத் தரிசாகப் போடாமல், எவ்வித நிலத்திலும்
பயிர் வளரும் என்பதை நமக்கு மறுபடியும் சொல்லித்தர ஒரு பெல்ஜியம் நாட்டுக்காரர் தேவைப்படுகிறார்.
விவசாயத்தைக் குறித்து நல்ல பதிவுகளை எழுதிவரும் சம்சாரி "தமிழ் விவசாயிகளுக்கு வழிகாட்டும்
வெள்ளைக்காரர்" என்ற பதிவில் இந்த பெல்ஜியம் நாட்டவர் புதுவைக்கு அருகில் ஒரு தரிசு நிலத்தைப்
பண்படுத்திய முறையையும் அதிலே தான் கண்ட தோட்டத்தின் அழகையும் சொல்லி, நம்மை யோசிக்க
வைத்திருக்கிறார். இதனையொட்டிய கருப்பொருளான கிராமத்து மக்களின் நகர்நோக்கிய இடம்பெயர்தலை ஒரு வீதிநாடகக்
கருவாக்கிய பிரளயன் நாடகக் குழுவினரின் "பயணம்" நாடகம், தனக்குள்ளும், தன்னைப் போலப் பார்க்க
வந்தோருள்ளும் என்னென்ன தாக்கங்களை ஏற்படுத்தியது என்பதையும், உழைக்கும் மக்களின் உணர்வுகளையும்,
பிரச்சினைகளையும் பேசுபவை இத்தகைய வீதி நாடகங்களே என்பதையும் குறிப்பிடுகிறார் ஆழியூரான். சொகுசு
அரங்கங்களில் நிகழும் எத்தனை நிகழ்வுகள் வெற்றுக் கேளிக்கையாக மட்டுமிருக்கின்றன என்பதையும் எண்ணிப்
பார்க்க வேண்டும். அப்படியே சமூக நிலவரங்களைப் பேசும் இத்தகைய அரங்குகளுக்கு வறிய மக்களில் எத்தனை பேர் போக இயலும்? இத்தகைய குறைகளைக் களைவதற்காக நிகழ்கின்றவையே வீதி நாடகங்கள். இவையே மக்களோடு
உணர்வளவில் அண்மித்திருக்கின்றன. ஒரு காலத்தில் ஆதிக்கம் குன்றியிருந்த இவை தற்போது மீட்டெடுக்கப்படுவது
மகிழ்வைத் தருகிறது.
இத்தகைய வீதி நாடகங்களில் இன்னொன்று, நிதாரி கொலைகளைக் குறித்தது. தயாரிப்பில்
இருக்கும் இந்நாடகத்தின் உருவாக்கத்தைச் சென்று கண்டு நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் மங்கை. வலைப்பதிவுகளின் பெரும் பலம் இத்தகைய செய்திகளையும் நிகழ்வுகளையும் வெளிக்கொண்டு வருவதற்கு பெரும் மிடையங்களை
நம்பியிராமல் நாமே நம் செய்திகளை வெளியில் கொண்டு வருவதே. ஏனென்றால், பெரும் மிடையங்கள் இப்போது
எம்மாதிரியான 'பெரும்'பணிகளில் ஈடுபட்டிருக்கின்றன என்பதை மங்கை தன் இன்னொரு பதிவில் காட்டியிருக்கிறார். சமூகப் பொறுப்பு மிக்கதாயிருக்க வேண்டிய இத்தகைய ஊடகங்கள் கவர்ச்சிக்கும், நிறுவனமயப்படுத்தப்பட்ட
சிந்தனைகளுக்கும், பக்கச்சார்புடைய கருத்தியல்களுக்கும் மக்களை அடிமையாக்கி வருகின்ற இவ்வேளையில் மக்களுக்கான
மிடையங்கள் பெருகவும் வளரவும் வேண்டும். வலைப்பதிவுகளை இத்தகைய மக்கள் மிடையங்களின் கணக்கில் சேர்க்கலாம். தமிழில் வலைப்பதிவுகள் தோன்றி வளரும் வரலாற்றைப் பலரும் எழுதியிருக்கிறார்கள். தமிழ்மணம் என்ற
முதலாவது தமிழ் வலைப்பதிவுத்திரட்டியை உருவாக்கிய காசியின் பார்வையில் தமிழ் வலைப்பதிவுகள் மற்றும்
திரட்டி(களை) பற்றிய தொகுப்பு இவ்வாரப் பூங்காவில் இடம்பெறுகிறது. மக்களுக்கான மிடையங்கள் எதிர்கொள்ளும் சவால்களை இத்தொகுப்பிலிருந்து உணரமுடியும்.
தீவிரவாதம் என்பது எப்போதும் வெடிகுண்டுகளோடும் துப்பாக்கிகளோடும் மட்டுமே வருவதில்லை. அது எல்லா மதங்களின் பெயர்களாலும் வெளிப்படுகின்றது. மக்களை
ஆன்மாவோடு தொடர்புகொள்ளச் செய்வதற்காக உண்டான வழிமுறைகள் மதங்களாற் கைப்பற்றப்பட்டு, மதங்களுக்காகவே
மனிதர்கள் என்பவர்களின் கண்மூடித்தனமான நம்பிக்கைகளாக உருவெடுத்துள்ளன. இத்தகைய மத
அமைப்புக்கள் அரசியலுக்குள் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்துவதன் மூலம் எல்லாத் தளங்களிலும் மக்களைத் தன் கட்டுக்குள் விழுத்தத் தொடர்ந்து முயல்கின்றன. இத்தகைய அமைப்புக்கள் இன்னும் மத நல்லிணக்க நாடான
இந்தியாவில் இருக்கின்றனவென்றும், அவற்றால் விளையக்கூடிய பாதகங்களைப் பற்றியும், ஆர்எஸ்எஸ் அமைப்பை
அண்மித்திருந்து அதன் செயற்பாடுகளை உற்று நோக்கிய மா.சிவக்குமார் தனது தொடர் பதிவில் எழுதிவருகிறார்.
பெண்கள், குழந்தைகள் என்று அப்பாவிக் குடிமக்களிலிருந்து ஈழத்துப் படைப்பாளிகளும் செய்தியாளர்களும் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டு வருவது நிகழ்கிறது. பாப்பரசரை ஸ்ரீலங்கா அரசத்தலைவர் சந்திக்கும் அந்த நாளிலும் விமானங்கள் ஈழத்திலே குண்டு வீசுகின்றன.
கண்டும் காணாத போக்கில் அனைத்துலக சமூகம் வாய்மூடி நிற்பதோடு மட்டுமன்றி, ஸ்ரீலங்கா அரசின்
இனவெறிப்போக்குக்கு ஆயுத உதவிகளை வழங்கி வருவதும் கண்டனத்துக்குரியது. இன்னொரு ஈழத்துக்கவிஞன் துப்பாக்கியின் குண்டுக்குப் பலியாகியிருக்கிறான். சந்திரபோஸ் சுதாகர் வவுனியாவில் கொல்லப்பட்டதைக் குறிப்பிட்டு அவரது
கவிதையொன்றினையும் இட்டிருக்கிறார் பொடிச்சி.
தமிழில் புதிய கலைச்சொற்களைப் புகுத்துவது குறித்து எழும்
சாரமற்ற விவாதங்களைச் சாடியிருக்கிறார் இராம.கி. புதிய கலைச்சொற்களை உருவாக்குவதும், அவற்றைப்
புழங்குவதுமே ஒரு மொழியை வளர்க்குமென்பது உலக மொழிகளறிந்த உண்மை என்பதை நாம் உணரவேண்டும்.
முற்காலத்தில் வாழ்ந்த இரட்டைப் புலவர்கள் இளஞ்சூரியர், ம(மு)துசூரியர் ஆகியோரின் வாழ்க்கையில் நடந்த கவித்துவமான நிகழ்வுகளைக் காட்டியிருக்கிறார் ஷைலஜா.
இவற்றுடன் திரைப்படம், சமூகம் குறித்த சுவை
மிக்க பல பதிவுகளுடனும் மலர்கிறது இவ்வாரப் பூங்கா. பங்களித்த அனைத்து பதிவர்களுக்கும் நன்றி.
|