சமீபகாலமாக நூற்றுக்கணக்கான செய்திகள் ‘மதம்’ பிடித்த யானையால் உயிரிழந்த மனிதர்கள் பற்றியும், சேதமடைந்த பொருட்களைப் பற்றியும் ( பெரும்பாலும் கேரளாவிலிருந்து) எனில் இந்த யானைகளை மத விழாக்களில் பயன்படுத்துவது தேவையா என்னும் கேள்வி எழுந்துள்ளது.
காட்டில் கம்பீரமாக உலவ வேண்டிய யானைகளைக் கொண்டு வந்து கோயில்களில் கட்டி வைப்பதால், சரியான உடற்பயிற்சி இல்லாமல் அவை அதிக எடை அடைந்து பல நோய்களுக்கு உள்ளாவதாக ஏற்கனவே மருத்துவக் குழுக்கள் எச்சரிக்கை விட்டிருக்கின்றன.
ஒரு அடிமை மனோ நிலையில் இருக்கின்ற இந்த வலிமையின் பிரம்மாண்டங்கள் ஏதேனும் ஒரு வாய்ப்பு வரும்போது எல்லாவற்றையும் துவம்சம் செய்து விடுகின்றன. கேரளாவில் யானைகளால் கொல்லப்பட்ட பாகன்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காதது.
ஒவ்வோர் விலங்குக்கும் தனிப்பட்ட சில இயல்புகள் இருக்கின்றன. அவற்றை அவை இழப்பதில்லை. கோயில் வாசலில் காசு வாங்கும் யானைக்கும் ஒரு நாள் வெறி வரலாம், சும்மா படுத்துக் கிடக்கும் யானைக்கும் வெறி வரலாம். மரணத்தைக் கூடவே கூட்டிச் செல்லும் இந்த சமாச்சாரம் தேவையா என்பதை அறிவார்ந்தவர்கள் சற்று சிந்தித்துப் பார்த்தல் நலம்.
குருவாயூர் கோயிலில் யானையைக் கட்டித் தீனி போடவே சுமார் மூன்று கோடி ரூபாய் ஆண்டு தோறும் செலவிடுகிறார்களாம்.
காடுகளில் இருக்கும் யானைகள் கோயில்களில் இருப்பது மதம் சார்ந்த தேவையெனில் அவற்றை கோயில் வளாகங்களில் பாதுகாப்பாக கட்டி வைத்திருப்பது நல்லது. பொதுவிடங்களிலும், மக்கள் திரளும் விழாக்களிலும் அவை வரும்போது தான் தேவையற்ற அசம்பாவிதங்கள் நிகழ்கின்றன.
கொதிக்கும் தார்ச்சாலைகளிலும், வெடிச் சத்தங்களின் இடையேயும், கலர் கலரான உடைகளிடையேயும், இரைச்சலிடையேயும் யானைகள் எப்போதும் குழந்தைகளைப் போல பாகனின் கையைப் பிடித்துக் கொண்டே செல்லவேண்டும் என யாரும் எதிர்பார்க்கவும் முடியாது.
யானகள் பாவம் சேட்டா… அதின விட்டேய்க்கு…
http://sirippu.wordpress.com/2007/04/30/elephants/




