|
நாட்குறிப்புகளிலிருந்து தட்டப்பட்ட தூசி |
|
|
|
அய்யனார்
|
தொலைந்த அடையாளம்
வெகு நாட்களுக்குப்பின்
நாம் வாழ்ந்திருந்த
அக்கடற்கரை நகரத்திற்க்கு
சென்றிருந்தேன்
இந்த நண்பகல் வெயிலில்
கடற்கரை மணற்திட்டில்
பாதச்சுவட்டில் பாதம் வைத்து
நடந்து கொண்டிருந்தது
ஒரு ஜோடி
நாம் வழக்கமாய் அமரும்
புங்கை மரத்தடி
மர பெஞ்சில்
நம் சாயல்களில் யாரோ
உள்ளங்கை பற்றியபடி
பேசிக்கொண்டிருந்தனர்
மேலும்
சருகுகள் கூட்டி வாரப்படாத
நூலக கட்டிடப் பின்புறம்
நன்றாய் புற்கள் வளர்ந்திருக்கும்
அசோக மரத்தடி
செயற்கை நீரூற்றை ஒட்டிய
சிமெண்ட் திட்டு
ராமன் தியேட்டர்
அ வரிசை கடைசி இருக்கையென
நாம் வாழ்ந்திருந்த
இடங்களின் புனிதம் கெடாது
இளம் காதலர்களே
நிரம்பியிருந்தனர்
ஒருவேளை நமக்கு முன்னர்
இவ்விடங்களை நிரப்பியவர்கள்
நம்மை போன்றவர்களாய்
இருந்திருக்கக் கூடும்
நாளை இவ்விடங்களை
நிரப்பும் இளம் காதலர்களின்
ரகசிய குறுகுறுப்புகளில்
துளிர்க்கலாம்
இழந்ததை தேடியலையும்
என்போன்றவனின்
வறண்ட இதழிலிருந்து
புன்முறுவல்கள்
இன்றென் காலை நேரம்
இன்றய விடியலில்
எந்த அவசரமுமில்லை
செய்யப்பட எதுவுமேயில்லாத
மற்றொரு நாளின்
சுகமான காலை
தேநீரை சுவைத்தபடி
என் பழைய தேசத்திலிருந்து
வெளிவரும் நாளிதழை
மேய்கிறேன்
வழக்கம்போல்..
மாவட்டந்தோறும் வன்புணரப்பட்ட
பெண்களின் விலாவரி கதைகளே
கட்டச் செய்திகளில்
என் சக இனத்தின் மீது தினமும்
குண்டுகள் போடப்படுகின்றன
குழந்தைகளை குறிபார்த்து
வீசப்படும் குண்டுகளுக்கு கைம்மேல் பலன்
நேற்றும் கடல் சில வீடுகளையும் பல உயிர்களையும்
ஏப்பம் விட்டிருக்கிறது
இந்த சட்டமன்ற தொடரில்
உடைந்த மண்டைகள்
வீசப்பட்ட செருப்புகள்
சென்ற கூட்டத்தொடரை
காட்டிலும் அதிகமாம்..
அரசிய…
ஆ!
தேநீர் தீர்ந்துவிட்டது
தேநீருக்குப்பின் உடனே
புகைக்க வேண்டும் எனக்கு
இரவு வந்து படித்துகொள்வேன்
நிறுத்திய இடத்திலிருந்து
வேர்கள் பிறழ்ந்து
வெகு தொலைவு வந்திருப்பினும்
நான் தமிழன்…
http://ayyanaarv.blogspot.com/2007/05/2.html
http://ayyanaarv.blogspot.com/2007/05/1.html
|