திருநெல்வேலி வட்டார மக்கள், அவர்களுக்கு மட்டும் புரியக்கூடிய நிறைய சொற்களை பேச்சு வழக்கில் உபயோகப்படுத்துவார்கள்.
நிறைய சொற்களை அந்த வட்டார எழுத்தாளர்கள் (வண்ணநிலவன், வண்ணதாசன் மற்றும் கி.ரா கூட) தங்களின் கதைகளில் கூட இயல்பாக பயன்படுத்தியிருப்பார்கள்.
என் அம்மா, திருநெல்வேலி மாவட்டம் என்பதால் என் வீட்டிலும் நிறைய புழக்கத்தில் இருக்கும்.
சில சொற்கள் மறந்தும், மறைந்தும் போய்விட்டன.
என் நினைவில் இருக்கும் சில மட்டும் இங்கே.
மச்சு வீடு - இருட்டடைந்த சிறு அறை, பணம், நகை, போன்ற விலை உயர்ந்த பொருள்கள் இருக்கும்.
தார்சா - வீட்டின் முன் அறை.
அங்கனக்குழி - குளிக்க பயன்படுத்தும் அல்லது தண்ணீர் புழங்கும் இடம்.
சொதி - தேங்காய் பாலில் செய்யப்படும் ஒரு வகை குழம்பு. (திரு.சயந்தனும் சோமியும் இதைப்பற்றி தனி ஒலிப்பதிவே பதித்திருக்கிறார்கள்). ஈழத்தமிழர்களின் பேச்சு வழக்கில் பெருவாரியான சொற்கள் திலி வட்டார வழக்காகவே இருக்கும்.
திலி திருமணங்களின் ரெண்டாவது அ மூன்றாவது நாள் உணவில் “சொதி” கண்டிப்பாக உண்டு.
மீந்து விட்ட கல்யாண தேங்காய்களை காலி செய்ய வேண்டும் என்பதால் கூட இருக்குமோ!
சின்னம்மை - தாயாரின் இளைய சகோதரி, சின்னம்மா.
வரிசையார் - பெண்கள் தங்கள் அண்ணனின் மனைவியை இப்படி அழைப்பார்கள்.
அத்தபிள்ள - தம்பிகள் தங்கள் அக்கா மாப்பிள்ளையை விளிக்கும் சொல்.
ஆங்ஞான் - தங்கள் செல்லப்பையன்களையும், வயதான ஆண்களையும் கூட இப்படித்தான் கூப்பிடுவார்கள் (இந்த சொல்லுக்கு எழுத்து வடிவம் கொண்டுவருவதற்குள் திணறிவிட்டேன்).
திருநெல்வேலி மக்கா யாரும் எதுனா தப்பு இருந்தா சொல்லுங்க! திருத்திக்கிடுதேன்!
அப்புறம் வேற ஏதாவது விட்டுப் போனது இருந்தாலும் சொல்லுங்க!
தாமிரபரணி ஆறு படத்துக்காக - திரு.சத்யன் சுகுமாரனுக்கு நன்றி.
http://veyilaan.wordpress.com/2007/05/29/




