இந்த வாரம் உலக மக்கள் தொகை கணக்கெடுப்புல ஒரு முக்கியமான மைல் கல்லா அமைஞ்சிருக்கு. மே 23ம் தேதியை உலக கிராம மக்கள் தொகையை, நகர மக்கள் தொகை தாண்டிய நாளா அறிவிச்சிருக்காங்க. இது ஒரு குறியீடு தான். ஐக்கிய நாடுகள் சபை 2010ல நகரத்தில 51.3 சதவீத மக்கள் இருப்பாங்கன்னு எதிர்பார்க்கறாங்க. இப்போதைக்கு இந்த விபரத்தை வடக்கு கரோலினா மாகாண பல்கலைக்கழகமும், ஜார்ஜியா பல்கலைக்கழகமும் சேர்ந்து வெளியிட்டிருக்காங்க. அவங்களோட கணக்குப்படி இப்போதைக்கு 3,303,992,253 பேர் நகரத்திலயும் 3,303,866,404 பேர் கிராமத்திலயும் இருக்காங்க.
நம்ம நாட்ல இந்த மாற்றம் எந்த அளவில இருக்குன்னு தெரியலை. ஒருவேளை தாண்டியிருக்காட்டினாலும், தாண்டுறதுக்கு அதிகமான நாட்கள் ஆகாதுன்னு நம்புறேன். கிராமங்கள் இந்தியாவின் முதுகெலும்புன்னு சொல்லி சுத்தமா அதை கண்டுக்காம விட்டாச்சி.அதிகமான கிராமங்களை உள்ளடக்கினது இந்தியா. அதனால இதனால வர்ற பாதிப்பும் அதிகமா தான் இருக்கும் இன்னைய வாழ்க்கை முறையில நகரமும் கிராமமும் ஒண்ணுக்கொன்னு பின்னி தான் இருக்கு.ஆனாலும் இந்த ரெண்டுக்கும் நடுவுல இருக்க்ற வித்தியாசங்கள் பெருசு. நகரங்கள் தங்களை தாங்களே சார்ந்து இருக்க முடியாது. தங்களோட ஒவ்வொரு தேவைக்கும் கிராமங்களை எதிர் நோக்கி தான் இருக்கணும். ஆனா கிராமங்கள் யாரை எதிர்நோக்கியும் இருக்க தேவையில்லை. இப்போதைக்கு இவங்க கணக்குப் படி கிராமங்கள் காலியாகிட்டிருக்கு.

இவங்க இதை சொல்லாட்டினாலும் கண் முன்னாடி தெரியறதே பயமுறுத்தற மாதிரி தான் இருக்கு. உதாரணத்துக்கு என்னோட கிராமத்தில இருந்த 200 குடும்பங்கள்ல இப்ப அங்க சுமாரா 100 குடும்பங்கள் இருந்தாலே அதிகம். குடும்பம் குடும்பமா வெளியேறினவங்க ஒருபுறம், அப்புறம் படிக்கறதுக்காகன்னு வெளியேறினவங்க இன்னொரு புறம். இதில முக்கியமான ஒன்னு வெளியேறினவங்க யாரும் ஊருக்கு திரும்பினதா தெரியலை. பக்கத்து நகரம், அதுக்கு பக்கத்தில பெரிய நகரம்னு ஒவ்வொருத்தரோட வாழ்க்கையும் ஊர்ந்து மேல மேல தான் போய்க்கிட்டு இருக்கு. ஒரு 10 பேர் இருக்கற எங்க குடும்பத்தில இன்னைக்கு எங்க பாட்டியைத் தவிர யாருமே ஊர்ல இல்லை. இதே நிலைமை தான் மத்த குடும்பத்திலயும். விவசாயத்தையே நம்பி இருக்கற ஊர்ல என்னோட தலைமுறையில விவசாயத்துக்குன்னு போனவங்கன்னு யாரையுமே நான் காமிக்க முடியாது. இதுக்கு எல்லாருமே படிச்சி நல்ல நிலைமைக்கு வந்துட்டாங்கன்னு அர்த்தம் கிடையாது. படிக்காதவங்களும் எதாவது ஒரு கூலி வேலைன்னாலும் நகரத்துக்கு போயிரணும்ன்ற எண்ணத்தில வெளியேறிட்டாங்க. இத்தனைக்கும் சுத்தி இருக்கற ஊர்களை கணக்கெடுத்தா எங்க ஊர் விவசாயம், வானம் பார்த்த ஒண்ணுன்னாலும் நல்ல முறையில தான் நடந்தது.ஆனாலும் இந்த மாற்றங்கள் தவிர்க்க முடியாததாகிருச்சி. இப்போதைக்கு மீதி அங்க இருக்கறவங்களும் எப்ப எடத்தை காலி பண்ணலாம்னு தான் உக்காந்துக்கிட்டு இருக்காங்க. ஏற்கனவே நாலு ஆசிரியர்கள் வேலை பாத்த எங்க ஊர் பள்ளிக்கூடத்தில இன்னைக்கு ஒரே ஒரு ஆசிரியர் தான். இருக்கற பிள்ளைங்களும் பக்கத்தில 10கிமீ தள்ளி இருக்கற நகர பள்ளிக்கு வந்திடறாங்க. இந்த மாதிரி போற குழந்தைகள்ல 3-4 வயசு குழந்தைகளும் அடக்கம். இன்னும் சில வருசங்கள்ல அந்த ஊர்ல மனுசங்க வாழ்ந்த தடம் மட்டும் தான் இருக்கும். இது தான் ஒவ்வொரு சின்ன கிராமத்தோட கதையாவும் இருக்கும்னு நினைக்கும் போது, என்ன சொல்றதுன்னே தெரியலை.