என் இனிய வலைத்தமிழ் மக்களே...
உலகத்தினர் அனைவருக்குமே நற்பண்புகளையும், நாகரிகத்தையும் கற்றும் கொடுக்கும் வல்லமை தமிழ் கலாச்சாரத்திற்கும், தமிழ் பண்பாட்டிற்கும் உண்டு என்று நமது கலாச்சாரக் காவலர்கள் பலரும் கதறக் கதறக் கூப்பாடு போட்டு, நம்மையும் அந்தக் 'கதை'யால் அழுக வைத்திருப்பது உங்களுக்குத் தெரியும்...
அவர்களது நேரிடை கண்களுக்குத் தெரியாமல் 'இராமர் பாலம்' போன்று சென்னையில் மறைந்திருந்த, "வேஷ்டி கட்டியிருப்பவன் மனிதன் அல்ல" என்கிற விஷயத்தை இந்த இடுகையில் எழுதியிருந்தேன். படித்திருப்பீர்கள்..
இந்த நேரத்தில் நமது துளசி டீச்சர் "உயிரின் விலை" என்கிற தலைப்பில் இந்த இடுகையில் நியூஸிலாந்தில் நடந்த ஒரு மரணத்தைப் பற்றி எழுதியிருந்தார்.
அப்போது படிக்காதவர்கள் அல்லது தவறவிட்டவர்கள் தயவு செய்து அங்கு சென்று அதைப் படித்துவிட்டு, மீண்டும் இங்கு வந்து தொடருங்கள்.. இல்லாவிடில் நான் சொல்லப் போகும் விஷயங்கள் புரியாமல் போகும் அபாயம் உண்டு.
நான் துளசி டீச்சரின் இடுகையில் அது பற்றி ஒரு பின்னூட்டம் இட்டிருந்தேன். அதன் பின் இரண்டு நாட்கள் கழித்து நமது துளசி டீச்சர், ஒரு மெயிலை எனக்குத் தட்டி விட்டிருந்தார். அதில் இருந்தது ஒரு புகைப்படம். அது இதுதான்.

புகைப்படத்தில் இருப்பவர்கள் யாரெனில், இறந்து போனவரின் வீட்டில் இருந்த மின்சாரத் தொடர்பை நீக்கிய "மெர்க்குரி பவர்" என்ற கம்பெனியின் உயரதிகாரிகள்தான். இறந்து போனவருக்கு தங்களது இறுதி அஞ்சலியைச் செலுத்த வந்திருக்கிறார்கள்.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம், என்னவெனில் கீழே இடது புறம் அமர்ந்திருப்பவர்தான் அந்த மெர்க்குரி பவர் கம்பெனியின் CEO. அவருக்குப் பின்னால் நாற்காலியில் அமர்ந்திருப்பவர்கள், அதே கம்பெனியில் வேலை செய்யும் சில எக்ஸிக்யூடிவ்கள்.
இதுவே எனக்கு முதல் ஆச்சரியத்தைத் தந்தது. ஒரு கம்பெனியின் தலைமை அதிகாரி தரையிலும், அவருக்குக் கீழ் பணியாற்றுபவர்கள் நாற்காலியிலும் அமர்ந்திருப்பது ஆச்சரியம்தானே..
இரண்டாவது ஆச்சரியம்.. கொஞ்சம் போட்டோவை உற்றுப் பாருங்கள்.. அவர்கள் அணிந்திருக்கும் பேண்ட்களுக்கு மேல் துண்டு போன்ற துணியன்றை அணிந்திருப்பது தெரியும்.
அதற்குப் பெயர் 'சுலு' என்பதாம். இறந்து போன அந்தப் பெண்மணி, நியூஸிலாந்து நாட்டில் அகதிகளாக வசிக்கும் 'சமோவா' இனத்தைச் சேர்ந்தவராம்.
அவர்கள் இன வழக்கப்படி இறந்து போனவர்களின் வீடுகளுக்கு வருகின்ற அனைவரும், இந்த 'சுலு' என்றழைக்கப்படும் துணியைக் கண்டிப்பாக அணிந்தே தீர வேண்டுமாம். கம்பெனி அதிகாரிகளும் அவ்வண்ணமே அணிந்து கொண்டுள்ளார்கள். இது எனக்கு அடுத்த ஆச்சரியத்தைத் தந்தது.
ஒரு தனியார் நிறுவனம் தன்னுடைய சட்டத் திட்டத்தின்படி ஒரு செயலை செய்துள்ளது. அதன் விளைவாக துரதிருஷ்டவசமாக ஒரு மரணம் நிகழ்ந்துவிட்டது. அந்த மரணத்திற்குக் காரணமாக இருந்தவர்களே, துக்கம் விசாரிக்க முன் வருகிறார்கள். அப்படி வரும்போது அவர்களுடைய கலாச்சாரத்தையும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நஷ்டஈடு கேட்டு கோர்ட்டுக்குப் போவோம் என்று சொல்லியிருக்கும் சூழ்நிலையிலும், அந்த நிறுவனத்தினர் இப்படி முன் வந்திருப்பது பாராட்டுக்குரிய விஷயம்தானே..
இங்கே நாம்.. உலகத்திற்கே அறிவுரை வழங்கியவர்கள்.. உலகப் பொதுமறையை உலக மொழிகள் அனைத்திலுமே மொழி பெயர்க்க வைத்திருக்கும் சாதனையைப் படைத்தவர்கள்..
தங்களால் பாதிப்படைந்த, மரணமடைந்த குடும்பத்தினரின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள நம்முடைய தனியார் அமைப்புகளும், அரசுகளும் என்றைக்காவது முயன்றதுண்டா? சிலவற்றை யோசித்துப் பார்த்தேன்..
50 ஆண்டுகளுக்கு முன்பாக நெய்வேலி நிலக்கரி நிறுவனம் அமைக்க நிலம் கொடுத்தவர்களின் மூன்றாவது தலைமுறை வாரிசுதாரர்கள், இன்னமும் கோர்ட்டில் வழக்குத் தொடுத்து கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள், அப்போது அவர்களுடைய முப்பாட்டனார்கள் அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி தங்களுடைய குடும்பத்தில் ஒருவருக்கு வேலை போட்டுக் கொடுக்கும்படி..
இந்த 50 ஆண்டு காலத்தில் 10 பொதுத் தேர்தல்களும் நடந்து முடிந்துவிட்டன. எத்தனையோ தலைவர்களும் வந்தார்கள், போனார்கள், சிலர் போய் சேர்ந்துவிட்டார்கள். ஆனால் இன்னமும் அந்த அபலை மனிதர்களுக்கு அந்த நிறுவனம் எந்த நிவாரணமும் கொடுக்க முன் வரவில்லை.
நிறுவனம் சொல்கின்ற ஒரே பதில், "இவர்களது கல்வித் தகுதிக்கு ஏற்ற வேலை எங்களிடம் இல்லை" என்று.. "கூட்டுகிற வேலை கூடவா இல்லை.." என்று பதில் மனுவில் கேட்டிருக்கிறார்கள் நிலத்தை இழந்த அப்பாவி மக்களின் மூன்றாம் தலைமுறை வாரிசுகள். இதற்கும் இன்றுவரையிலும் பதில் இல்லை நிர்வாகத்திடமிருந்து..
போபாலில் யூனியர் கார்பைடு ஆலையின் விஷ வாயுக் கசிவில் பாதிக்கப்பட்டவர்கள் நஷ்ட ஈட்டைப் பெறுவதற்கு இரண்டு மகாமகம் காத்திருந்து இப்போதுதான் கோர்ட் உத்தரவின் பேரில் நஷ்டஈட்டுத் தொகையை கொஞ்சம், கொஞ்சமாக பெற்று வருகிறார்கள்.
அந்தக் கொடிய சம்பவம் நடந்தபோது யூனியன் கார்பைடு நிறுவனம் அப்போது வெளியிட்ட ஒரு துண்டு அறிக்கையை பெரும்பாலான இந்தியர்கள் இப்போது மறந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். அந்த அறிக்கையில், "இந்திய மக்கள் பாவம், புண்ணியம் நிறைய பார்ப்பவர்கள். அந்த வகையில் இதையும் கருதிக் கொள்ளுங்களேன்.." என்று இருந்தது. - இந்தியர்களுக்கு இது தேவைதான்..
நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி சக்கரை ஆலை அமைக்க நிலம் கொடுத்தவர்கள் தங்களது வாரிசுகளுக்கு வேலையும், அரவைக்கு கரும்பு கொடுத்தவர்கள் கொடுத்த கரும்புக்கு பணத்தையும் கேட்டு தங்களால் முடிந்த அளவுக்கு போராட்டம் நடத்திப் பார்த்து ஓய்ந்து போய்விட்டார்கள். இப்போதுதான் அவற்றைப் பரிசீலிக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்களாம்..
கூடங்குளத்தில் அணு மின் நிலையம் அமைக்க நிலம் வேண்டும் என்று சிலரிடம் கேட்டும், பலரிடம் மிரட்டியும் நிலத்தை பறிமுதல் செய்த அரசு எல்லோரையும் போல் அள்ளிவிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி நிலத்தை இழந்த மக்கள் இந்த நிமிடம்வரையிலும் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
அந்த அணுமின் நிலையமே இங்கு அமையக்கூடாது என்று பொங்கி எழுந்திருக்கும் பெருவாரியான மக்களின் ஆரவாரத்தில், இந்த சிறுபான்மை மக்களின் கோஷம் பத்திரிகைகளின் காதுகளை எட்டவில்லை.
15 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை வண்டியூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கட்டிய வீடுகளை வாங்கி முழுப் பணத்தையும் கட்டிய மதுரைத் தமிழர்கள் அனைவருக்குமே இன்றுவரை வீட்டுப் பத்திரம் கொடுக்கப்படவில்லை.
காரணம், அந்த நிலத்தை வாங்கியதற்கும், வீடுகளைக் கட்டி முடித்ததற்கும் இடையிலான காலகட்டம் கூடியதால் வாரியம் வாங்கிய கடன் தொகையின் வட்டி கூடிவிட்டதாம். ஆகவே அந்த வட்டித் தொகையையும் இந்த அப்பாவி மக்கள்தான் கொடுக்க வேண்டுமாம்.. இது எப்படி இருக்கு?
இன்றுவரை அந்த அப்பாவிகளும் ஒவ்வொரு அலுவலகமாக ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறார்கள். யாரும் பதில் சொல்லவில்லை. "கோர்ட்டில் பார்த்துக் கொள்ளுங்கள்" என்று அலட்சியமாகச் சொல்லிவிட்டார்கள் அதிகாரிகள்.
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கு துணிகளை நெய்து கொடுத்த நெசவாளர்களுக்கு இன்னமும் பாக்கிப் பணம் பட்டுவாடா செய்யப்படவில்லை. காரணம் கேட்டால், "நிறுவனத்தில் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவே காசில்லை.." என்று கூசாமல் பொய் சொல்கிறார்கள்.
ஆனால் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் முதல்வரையும், அந்தத் துறை அமைச்சரையும் வாழ்த்தி அனைத்துப் பத்திரிகைகளுக்கும் விளம்பரம் கொடுக்க மட்டும் அந்த நிறுவனத்திடம் பணம் கொட்டிக் கிடக்கிறது..
தனியார் பஸ்களில் அடிபட்டு இறந்தவர்களின் வாரிசுகள் நஷ்ட ஈடு கேட்டு பல்வேறு கோர்ட்டுகளில் தொடர்ந்திருக்கும் வழக்குகளே பல ஆயிரத்திற்கும் மேல்.. எந்த பஸ் நிறுவனமும் சாமான்யத்தில் இறங்கி வருவதில்லை.
வாய்தா மேல் வாய்தா வாங்கி.. தற்போது அக்குடும்பத்தில் ஒருவர்தான் உயிருடன் இருக்கிறார் என்ற நிலைமைக்கு வந்த பிறகு, அக்குடும்பத்துடன் இரக்கமாகப் பேசுவதைப் போல் பேசி, முடிந்த அளவுக்கு செத்துப் போனவரின் முழு உடம்பில் தலைக்கு மட்டும் தோராயமாக ஒரு விலை பேசி முடித்து ஒரு படுகொலையை கச்சிதமாக பல ஆண்டுகள் கழித்து செய்து காட்டுகிறார்கள்.
2000-மாவது ஆண்டுகளில் தெருவுக்குத் தெரு பைனான்ஸ் நிறுவனங்கள் வாசலில் உண்டியல் வைத்து வசூல் பண்ணாத குறையாக டெபாஸிட்டுகளை மக்களிடமிருந்து வாங்கி நாமம் போட்டது நமக்குத் தெரிந்த கதை. இதுவரை மூடப்பட்ட அனைத்து நிதி நிறுவனங்களும் மொத்தமாக மோசடி செய்த தொகை 1000 கோடியைத் தாண்டி விட்டது என்கிறார்கள்.
இதில் முக்கால்வாசி தொகை 30 வருடமாக நாயாய், பேயாய் உழைத்த மாதச் சம்பளத்து ரிட்டையர்டு தமிழர்கள் சேர்த்து வைத்த பணம்.. அவ்வளவும் சுருட்டப்பட்டது. "இதோ தருகிறோம்.. அதோ தருகிறோம்.." என்று இன்னமும் பிசாசு மாதிரி இவர்களை அலைய வைத்துக் கொண்டிருக்கின்றன போலீஸ¤ம், அரசும்.
வீட்டைப் பூட்டிவிட்டு ஒரு மாதம் ஊருக்குப் போய்விட்டுத் திரும்பி வந்தால் மின்சார கட்டண பில் தயாராக நமக்கு முன் காத்துக் கொண்டிருக்கும். "நாம்தான் ஊரில் இல்லையே.. பின்பு எப்படி பில்..?" என்று பகுத்தறிவைப் பயன்படுத்தி யோசித்தீர்களானால் தொலைந்தீர்கள் நீங்கள்..
"இதையெல்லாம் போன்ல சொல்ல முடியாது ஸார்.. நேர்ல வாங்க.." என்பார்கள். தண்டத்திற்கு அலுவலகத்தில் லீவு சொல்லிவிட்டு நீங்களும் செல்வீர்கள்.. கணெக்கெடுப்பாளர், செக்ஷன் கிளார்க், கண்காணிப்பாளர், A.O., என்று ரவுண்ட்டாக மீட்டிங் பேசிவிட்டு கடைசியாக இளநிலைப் பொறியாளரிடம் வந்து நிற்கும் உங்களது புகார். அவரும் முதலில் கூலாக, "நீங்க மொதல்ல பணத்தைக் கட்டிருங்க.. அப்புறமா அடுத்த பில்லுல இதை மைனஸ் பண்ணிரலாம்.." என்பார்.
"நான் பணம் கட்ட மாட்டேன். முதல்ல தப்பும் தவறுமா பில் எழுதியிருக்கிறவர் மேல ஆக்ஷன் எடுங்க.." என்று நீங்கள் சொன்னால் அவ்வளவுதான்.. பணத்தைக் கட்டாத காரணத்தால் உங்கள் வீடு இருட்டாகிவிடும். பின்பு நீங்கள் கோர்ட், வக்கீல், பீஸ் அலைந்து திரிந்து ஸ்டே வாங்கி அதைக் கொண்டு போய் அவர்களிடம் கொடுத்து..
நினைத்துப் பார்க்க எப்படியிருக்கிறது நம்முடைய ஜனநாயக ஆட்சி முறை...?
சரி இதை விடுங்கள்.. வந்தாலும் வந்தார்கள்.. ஏன் அந்த 'சுலு' என்ற ஆடையை அணிய வேண்டும்? அணியாமலேயே இருந்திருக்கலாமே..? யார் கேட்கப் போகிறார்கள்..
துக்க வீட்டில் அவர்களுடைய கலாச்சாரத்தை மதிக்கிறார்கள். அடுத்தவர்களுடைய கலாச்சாரத்தை, நம்பிக்கையை மதிப்பதே தொன்மையான நாகரிகம் என்ற உணர்வு அவர்களுக்கு இருக்கிறது..
இங்கே... பெற்றெடுத்த அப்பனும், அவனைப் பெற்றெடுத்த தாத்தாவும் கட்டிய வேட்டி பேரனின் கண்களில் ஸ்பெயின் நாட்டு காளை விளையாட்டில் காளையின் கண்ணில் தெரியும் சிவப்புக் கலர் துணியைப் போல் அகோரமாகக் காட்சியளிக்கிறது.
இதைத் தட்டிக் கேட்க வேண்டியவர்கள் அந்த கிளப் எங்கோ அமெரிக்காவில் இருப்பதைப் போல் இன்னமும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட திரு.நாராயணன் தமிழக அரசுக்கு புகார் மனு கொடுத்துள்ளார். இதுவரையிலும் அரசிடமிருந்து பதில் இல்லை. இதற்குப் பதில் வரும் என்று எனக்கும் நம்பிக்கையில்லை.
பல்வேறு செய்தி சேனல்களில் கடந்த இரண்டு நாட்களாக சிறப்புச் செய்தியாக இதைக் காண்பித்தபடி இருந்தார்கள். பதிலளிக்க வேண்டிய முக்கியப் பிரமுகர்கள் ஓடி ஒளிந்துவிட்டு, அலுவலக ஊழியரைப் பதிலளிக்கச் சொல்கிறார்கள்.
கலாச்சாரக் காவலர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொண்டவர்கள் வசதியாக தேர்தல் பிஸி என்று சொல்லி ஒதுங்கிக் கொண்டார்கள். அவர்களுக்குத் தெரியும்.. அட்சயப் பாத்திரத்திலேயே ஓட்டை போடக்கூடாது என்று..
"எதற்கெடுத்தாலும் நமக்கென்று ஒரு கலாச்சாரம், ஒரு பண்பாடு இருக்கு. அதை மீறக்கூடாது.." என்று சொல்லிக் கொண்டு குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருக்கிறோம்.
வெளிநாட்டவனிடம் கலாச்சாரமும் இல்லை பண்பாடும் இல்லை. அவன் நாடோடியைப் போல் வாழ்க்கை நடத்துகிறான் என்று சொல்லிக் கொள்ளும் நாம்தான், உண்மையில் நாடோடிகளைப் போல் திரிகிறோம்.
கொள்ளை லாபம் அடிக்கும் தனியார் நிறுவனங்கள், அவர்களிடம் தேர்தல் நிதிக்காக மண்டியிட்டுக் கிடக்கும் அரசுகள்.. அரசுகளின் ஆசியால் தங்களை வளர்த்துக் கொள்ளும் அரசியல்வாதிகள், அரசையும், அரசியல்வாதிகளையும் பகைத்துக் கொள்ளாமல் சமுதாயத்தில் முக்கியப் புள்ளிகளாகத் திகழும் அதிகார வர்க்கத்தினர் இவர்களிடையே கொஞ்சமாவது நம்முடைய குறைகளை காது கொடுத்துக் கேட்க ஆள் இருக்கிறார்களா என்று தேடும் அப்பாவி மனிதர்கள்.. இதுதான் இந்தியா.
ஒரு நிறுவனம் அல்லது அரசு அமைப்புகள் மீது புகார் கூறினால் அதை பரிசீலித்து அதில் தவறு உள்ளதா இல்லையா என்று விசாரித்துச் சொல்லக்கூட இங்கே கோர்ட்டைத்தான் அணுக வேண்டியுள்ளது.
இதே கதை தமிழ்நாட்டின் ஒரு கோடியில் நடந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
பத்திரிகைகளில் வந்திருந்தால் நான்கு பேருக்கு அது ஒரு துக்கச் செய்தி.. அந்த ஊழியருக்கு எச்சரிக்கை.. அமைச்சரின் அனுதாபம். கூடவே பணத்தைக் கட்டித் தொலைஞ்சிருக்கலாமே என்று ஒரு மிரட்டல்.. வராவிட்டால் அந்தப் பகுதி VAO-வின் உதவியுடன் எறும்போடு எறும்பாக அந்த உடல் புதைக்கப்பட்டிருக்கும். அவ்வளவுதான்..
இருந்தாலும், ஒரு விஷயத்தை நாம் மறக்க வேண்டாம்..
"யாதும் ஊரே; யாவரும் கேளீர்" என்ற உயர்ந்த தத்துவத்தை உலகத்திற்குக் கொடுத்தவர்கள் தமிழர்களாகிய நாம்தான்.
http://truetamilans.blogspot.com/2007/06/blog-post_09.html
|