|
காயத்ரி
|

வெகுசில வருடங்களாய்த்தான்
என்னோடிருக்கிறது இது.
கனத்த சுவர்கள்
மற்றும் அதனினும் கனத்த
மெளனங்களால் சூழப்பட்டு....
வேறெங்கும் பயணம் போகவியலாத
துயரத்தையும்
என்றும் கண்மூடவியலாத
அவஸ்தையினையும்
முணுமுணுப்பாய் வெளியிட்டபடி!
எவரும் இதுவரை அறிந்திராத
என் அபத்தங்கள்...
அந்தரங்கங்கள்...
அவமானங்களைத் தொடர்ந்த
மருகல்கள்...
முழங்கால்களுக்கிடையே
புதைந்து போகும் விசும்பல்கள்...
பலவற்றையும் அறிந்து வைத்திருக்கிறது.
நானே உணர்ந்திராத என் காதலை
ஒரு அதிகாலையில் எழுப்பி
என்னிடம் சொன்னதும்
இதுவாய்த்தான் இருக்க வேண்டும்.
தினமும் கசியும் இருளினூடே
என் உறக்கத்தைக்
கண்விழித்துப் பார்த்திருக்கும் இவ்வறை...
எதிர்பார்த்திருக்கலாம்
தனக்கென்றோர்
கவிதை எழுதப்படுவதையும்!
http://gayatri8782.blogspot.com/2007/06/blog-post_18.htm l
|