வணக்கம் தலைவி தலைவர்களே…
எனக்கு ரொம்ப நாளா மனசுல ஒரு ஆசை இருந்துகிட்டே இருந்தது. அதை எப்படி செயல் படுத்துவதுன்னு புரியவே இல்லை. இப்போதான் அந்த ஆசைக்கு ஒரு உருவம் வந்து கொண்டு இருக்கு. இந்த நிலைமைல நான் நாடுவது எல்லாம் நம் வலை நண்பர்களின் அன்பும் ஆதரவும் தான்.
சரி நேரா விஷயத்துக்கு வரேன். இந்த வலைப்பதிவுகள் பற்றிய அறிமுகம் சமீபத்துல கிடைச்சதுதான். கல்வித்துறைல முதுகலை படித்துக் கொண்டிருக்கும் எனக்கு ஏன் இந்த வலைப்பதிவுகளை ஒரு கருவியா உபயோகித்து நாம பாடத்திட்டத்தை மேம்படுத்தக் கூடாதுன்னு ஒரு எண்ணம். அந்த நேரத்துல தான் என்னோட பல்கலையில போன வருஷம் தேசிய சமூக அறிவியல் மாநாடு நடந்தது. அதுல இதைப் பற்றி ஒரு சின்ன ஆராய்ச்சி கட்டுரையை அரங்கேற்றினேன். ஆனால் அது வெறும் தாளிலேயே இருந்துவிடக் கூடாதுன்னு என் பள்ளிகளிலும் பிற பள்ளிகளிலும் போய் அதை நடைமுறை படுத்த விசாரித்தேன். ஆனால் அங்கு வலையுலகம் வாங்கியுள்ள நல்ல பேரினால் பள்ளிகளில் வலைத் தொடர்பு இழுக்கவே மறுத்து விட்டார்கள்.
என்ன செய்ய? இந்த நிலையில் உதயமானதுதான் ஒரு புது யோசனை. நாம் ஏன் ஏற்கனவே இருக்கின்ற ஒரு அமைப்புக்குள் சென்று செய்ய வேண்டும். நாமே ஒரு புது அமைப்பை உண்டு பண்ணலாமே என்று தோன்றியது. பின்பு எனது பேராசிரியரிடம் கேட்டதற்கு அவரும் சிறு சிறு ஆலோசனை சொன்னார். இவைஅனைத்தையும் உங்கள் முன் வைக்கிறேன். இது நடைமுறை சாத்தியம் என்பவர்களும், இல்லை என்று நம்புவர்களும் தாராளமாகத் தங்கள் கருத்துகளை அனுப்புங்கள். அதற்காக ஏங்கி நிற்கிறேன்.
யோசனை இதுதான். நாம் சின்ன அமைப்பு ஏற்படுத்த வேண்டும். அங்கே 5 அல்லது 6 கணிப்பொறிகள் வாங்கிப் போட்டு, கல்வியின் ருசி அறியாத அல்லது பாதியில் படிப்பை விட்டு விட்டவர்களுக்கு கல்வி அளிக்க வேண்டும். சுறுக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் ஒரு மென் - பள்ளி துவங்க வேண்டும். இங்கே ஆசிரியர்கள் தினம் வேலைக்கு வரவேண்டும் என்ற அவசியம் இல்லை. வலைமூலம் நம் பள்ளியின் பாடத்திட்டமும் அதற்குத் தேவையான கலந்துரையாடல்களும் கொடுக்கப் படும். மாணவர்கள் தாங்கள் புரிந்து கொள்ளும் விஷயங்கள் குறித்து வலைமூலம் தங்கள் எண்ணங்களை எழுதுவார்கள். அவர்களது எழுத்துக்களை வைத்து நாம் கொஞ்சம் கொஞ்சமாய் அவர்களது மனவளர்ச்சியை ஆராயலாம். இதற்கு தேவை ஒரு மென்பள்ளியின் வலைதளம், ஒரு சின்ன அலுவலகம், 5-6 கணிப்பொறி, இலவசமாக இந்தக் கல்வியைத் தொடர மாணவர்கள். கடைசி தேவையை அடைவதுதான் கடினம் என்பது மிக நன்றாகத் தெரியும். ஆனால் நாம் சொந்தமாக ஒரு பள்ளிக்கூடம் துவங்குவதற்கு தேவையான முதலீட்டை விட இதில் மிகக்குறைவே வேண்டியது இருக்கும். துவக்கத்தில் பள்ளி 14-15 வயது குழந்தைகளின் தேவையைப் பூர்த்தி செய்யவே பயன்படலாம். நாளாக நாளாக இதை மேற்கொண்டு வளர்க்கலாம்.
இன்னும் ஒரு யோசனை உருவாகியது. சில தொழிற்சாலைகளில் இந்த வயது குழந்தைகள் படிப்பை விட்டு வேலை செய்யக் கூடும் அப்படிப் பட்டவர்களுக்கு எளிதில் அந்தத் தொழிற்சாலை அதிபரின் உதவியோடு அங்கேயும் துவங்கலாம். எனது யோசனை எத்தனைபேருக்கு பிடிக்கும் என்று தெரியவில்லை… ஆனால் நிச்சயம் பல மாறுதல்களுக்காகவும் அடிப்படை குறிக்கோள் வெற்றி பெறவும் தேவையான உயிர் இதில் உள்ளது என்று நம்புகின்றேன்.
எனது ஆராய்ச்சி கட்டுரை இதோ உங்கள் பார்வைக்காக…
blogging-full-paper.doc
|