மாறுபட்ட கருத்துக்களை எதிர்கொள்வதில் நாம் எவ்வளவு தூரம் மாற்றாரின் கருத்துக்கு இடம் தருகிறோம் என்பது நாட்டுக்கு நாடு, இனத்துக்கு இனம் வேறுபடுவதாகத் தோன்றுகிறது. கருத்துக்களோடு மோதிக் கொண்டிருக்கும் இருவர் ஆளுமைகளோடு மோதிக்கொள்ளும் வெளிக்கு மிகச் சுலபமாகத் தள்ளப்படுதல் தமிழ் இலக்கியவுலகில் பெருமளவு நடந்து வருவதை வலையுலகிலும் காணமுடிகிறது. ஒரு கட்டத்தில் மாற்றுக் கருத்துக் கொண்டவர் என்ற நிலையிலிருந்து இருவரும் மாறி, மாற்றமில்லா எதிரிகள் என்ற கட்டத்தையடைகின்றார்கள். இத்தகைய சச்சரவுகளால் விளையும் பெரும் பாதகங்களுள் ஒன்று, இதுவரை இருவரும் சேர்ந்து கட்டமைத்திருந்த ஒரு பொதுத்தளம்/பணி சிதைவடைதலும் அவ்விடத்தினை மாற்றார் வசப்படுத்திக் கொள்ளுதலும் ஆகும். இத்தகைய சகோதரச் சண்டைகளுக்குத் தமிழர்கள் மிகவும் சுலபமாக ஆட்பட்டுவிடுபவர்களாகவே இருந்து வருவதை அண்மைய வலைப்பதிவு நிகழ்வுகளும் உணர்த்துகின்றன.
அஞ்சுதலைப் பாம்பென்பான் - அப்பன்
ஆறுதலை யென்றுமகன் சொல்லிவிட்டால்
நெஞ்சு பிரிந்து விடுவார் - பின்பு
நெடுநா ளிருவரும் பகைத்திருப்பார்
சாத்திரங்க ளொன்றும் காணார் - பொய்ச்
சாத்திரப் பேய்கள்சொலும் வார்த்தைநம்பியே
கோத்திரமொன் யிருந்தாலும் - ஒரு
கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ்வார்
தோத்திரங்கள் சொல்லியவர்தாம் - தமைச்
சூதுசெயு நீசர்களைப் பணிந்திடுவார் - ஆனால்
ஆத்திரங் கொண்டே யிவன் சைவன் - இவன்
அரிபக்த னென்றுபெருஞ் சண்டையிடுவார்
எண்ணிலா நோயுடையார் - இவர்
எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார்
கண்ணிலாக் குழந்தைகள்போல் - பிறர்
காட்டிய வழியிற் சென்று மாட்டிக் கொள்வார்
நண்ணிய பெருங்கலைகள் - பத்து
நாலாயிரங் கோடி நயந்து நின்ற
புண்ணிய நாட்டினிலே - இவர்
பொறியற்ற விலங்குகள் போல வாழ்வார்
என்று பாரதி சொன்னதை மீளவும் நினைத்துப் பார்ப்பது பொருத்தமாகவிருக்கும். அண்மையில் ம.க.இ.க, மற்றும் பெரியார் வழித் தோழர்களுக்கிடையே நிலவிய கருத்து மோதல்களையொட்டிய மிதக்கும்வெளியின் பதிவு சிந்திக்கத் தகுந்தது. இவர்கள் சேர்ந்து நின்று குரல்கொடுக்க நந்தகுமார் சொல்லும் ராமேசுவரக் கோயிலின் தீட்டுக்கதை வெளித்தெரிகின்றது. இந்நேரத்தில் நம் ஆடுகளத்தைச் சிதைத்துக்கொள்வதில் யாருக்கு வெற்றி என்பதைத் தோழர்கள் உணரவேண்டும்.
.
நெடுநாட்களுக்குப் பின் வலைப்பதிவுக்குள் மீள்வருகை செய்திருக்கும் பத்திரிகையாளர் மாலன் எழுதியிருக்கும் "ஜனநாயகப் பொம்மலாட்டம்", நிகழ்ந்துவரும் குடியரசுத் தலைவர் தேர்வின் பின்னிருக்கும் சில கூறுகளைக் கோடிட்டுக் காட்டுகிறது. இதனோடு பொருத்தி நோக்க வேண்டியது தமிழ் சசியின் "அப்துல் கலாமின் தேசியவாத முகமூடி".
அஞ்சல் வழிக் கல்வியைப் போலவே தற்போது பரவி வருவது இணையவழிக் கல்வி. இது பள்ளிக் கல்வி கிடைக்காதவர்களுக்குப் பல வசதி வாய்ப்புக்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இவர்களிலும், நலிந்தோரைக் கருத்திற்கொண்டு மென்பள்ளி உருவாக்கும் முயற்சியொன்றுக்கு அழைத்திருக்கிறது அயன் உலகம்.
தமிழில் இருக்கும் தகுந்த சொற்களைப் புழங்குவது, அல்லது வேர்ச்சொற்களிலிருந்து புதிய சொற்களை வடிவமைத்துப் புழங்குவது ஆகியவற்றை நாம் நிறைய ஊக்குவிக்கவேண்டும். இது உலகின் வசதி மற்றும் பொருள் மாற்றங்களுக்கிசைய தமிழ் தன்னை மேம்படுத்திக் கொள்வதற்கான உத்தி. இவ்வகையில் பல நற்சொற்களை நமக்கு அடையாளங்காட்டி வருபவர் முனைவர் இராம.கி. இவ்வார பூங்காவில் free மற்றும் trade என்பவற்றுக்கான சொற்களையும், கூடவே பல ஆங்கிலச் சொற்களுக்கும் நல்ல தமிழ்ப் பெயர்களைப் பரிந்துரைத்துள்ளார். இவற்றைப் பயன்படுத்துவது மற்றும் பரப்புவதில்தானிருக்கிறது அவரது முயற்சியின் வெற்றி. தமிழின் அழகிலும் சுவையிலும் தோய்ந்தெழும் வண்ணம் அமைந்திருக்கிறது பானுகுமாரின் மலர்மிசை ஏகினான் பதிவு. இதில் திருவள்ளுவரின் சமண சமயத்தின் சார்புத் தன்மையைச் சான்றுகளுடன் விளக்கியுள்ளார்.
விவசாயிகளே இந்த நாட்டின் முதுகெலும்பு என்பது உண்மையாகவே இருந்தாலும், அதனை எவ்வளவு ஒழுங்காகப் பராமரிக்கிறோம் என்று பார்த்தால், நம் விருப்பம் போல உண்பது, அக்கறையின்றி, உடற்பயிற்சியின்றி இருப்பது என்று முதுகெலும்புக்குச் செய்யும் எல்லாக் கெடுதிகளையும் விவசாயிகளுக்கும் செய்து வருகிறோம். கரும்பு விவசாயத்தின் பெருநட்டத்தைக் குறித்து ஸ்ரீ (முதலெழுத்து) எழுதிய பதிவினைத் தொடர்ந்து சிவகுமார் தனது கருத்துக்களையும் மற்ற பதிவர்களின் கருத்துக்களையும் தொகுத்தளித்திருக்கிறார். சிவாஜி படத்தையும், கட்சிப் பூசல்களையும் விபரமாகப் பார்க்கத் தெரிந்த நமக்கு முதுகெலும்பு நோவைப் பார்க்க முடியவில்லையென்பது வெட்கத்துக்குரியது. இதனைப் போன்ற விழிப்புணர்வின்மையையே எச்.ஐ.வி விவகாரத்திலும் நாம் கொண்டுள்ளோம் என்பதை நாகரத்தினத்தின் பதிவு உணர்த்தும்.
அமெரிக்காவில் திருமண முறிவுகளைக் குறித்து பத்மா அரவிந்த் எழுதியிருக்கும் பதிவிலிருந்து குடும்ப வன்முறைகள் எந்த அளவுக்கு மூடிவைக்கப்படுகின்றன என்பதும், தெரியவரும். புதிய பதிவர்களுள் ஒருவரான கஜந்தி மிகவும் எளிமையான வார்த்தைகளால் நேரானதொரு கவிதையினை எழுதியிருக்கிறார். எல்லோருக்குமானது இது.
அருள் குமாரின் கூர்க் பயணம், அடுத்த வாரம் நிகழவிருக்கும் நெய்வேலி புத்தகக் கண்காட்சியைப் பற்றிய செல்வேந்திரனின் அறிவிப்பு, நிகழ்ந்து முடிந்த வலைப்பதிவர் சந்திப்பைப் பற்றிய பொன்ஸின் பதிவு, குசும்பனின் கூட்டாஞ்சோறு அனுபவம், சின்னக்குட்டி-கொள்ளிவாய்ப் பிசாசு சந்திப்பு விவரணை, அய்யனாரின் வலையுலகச் சித்திரம், காந்தியைக் குறித்த மா.சிவகுமாரின் கேள்விகள், இவற்றோடு செறிந்து வந்திருக்கிறது இவ்வார பூங்கா இதழ். புகைப்படக் கருவியைப் பற்றி எழுதியிருக்கும் ஜீவ்ஸ் இவ்வாரத்தின் புதிய பதிவராக அறிமுகமாகிறார்.இவ்வாரத்துக்கான தமிழ்மணம் வாசிப்பில் பகுதியை எழுதியிருக்கும் மோகன்தாஸுக்கும், நட்சத்திரத் தேர்வுகளை அளித்த மங்கைக்கும் நன்றி!
|