
ஊரே மெல்லுறக்கம் கொள்ளும் பின்மதியநேரம்
தெருமுடக்கில் நீட்டிக்கொண்டிருந்தது
அன்று விசித்திரப் பிராணியாகி
சொல்லாமல் வகுப்பினின்று வெளிநடந்தேன்.
ஓடும் பேரூந்தில் திடுக்குற்று விழிதாழ்த்தி
அவமானம் உயிர் பிடுங்க
கால்நடுவில் துருத்திற்று
பிறிதோர்நாள் வீட்டிற்குள் புகுந்து
சோபாவிலமர்ந்தபடி காட்சிப்படுத்திற்று
இருள் படர்ந்த தெருவொன்றில் மார்பழுத்தி
இறைச்சிக்கடை மிருகமென வாலுரசிக்கடந்தது
ஆண்மையை நிரூபித்தல் நல்லதே!
ஆனால் தீபா
திகைப்பிருள் வீழ்ந்து
பதற்றத்தில் நெஞ்சு நடுக்குற்று
அவமதிக்கப்பட்டவளாய்
நீயும் அழுதிருப்பாய் என்றெண்ண
துப்பாக்கியால் ‘குறி’தவறாமல் சுடத்
தெரிந்திருக்க விரும்புகிறேன்.
|