|
தொகுப்பாளரின் மேசையிலிருந்து |
|
|
|
ஆசிரியர்குழு
|
சமகால இயற்றமிழில் அதிகமாகப் புழங்கப்படும் வார்த்தைகளில் ஒன்று அரசியல். அரசு + இயல் என்ற இவ்வார்த்தை அரசினை வழிநடத்திச் செல்லும் துறையினையும் அதன் உட்கூறுகளையும் மட்டும் சார்ந்ததாக இக்காலத்தில் நம்பப்படவில்லை. கருத்துக்கள், அவற்றினடியில் இயங்கும் உளவியல், மாற்றுக்கள், அவற்றுக்கான அடித்தளங்கள், இவற்றுக்கிடையேயான உறவுகள் எல்லாவற்றிலும் இவற்றுக்கு அடிப்படையான ஒரு இயக்கம் ஆகியவை அரசியல் என்பதாகப் பொருள்பெற்று வருகிறது. அரசு எவ்வாறு குடிகளின் அன்றாட வாழ்வில் இன்றியமையாத அடிப்படைத் தத்துவப் பொருளாக இருக்கிறதோ அவ்வாறான அடிப்படைப் பொருளாக இந்த அரசியல் என்ற வார்த்தையும் இருப்பதால் இப்பெயர் பொருத்தமானதாகவே தோன்றுகிறது. politics எனப்படும் அரசியலிலிருந்து மேற்சொன்ன இயக்கம் வேறுபடும்படியான சொல்லாட்சியைக் கண்டுகொள்ளும் வரையிலேனும் இது பொருத்தமாகவே தோன்றுகிறது. வலைப்பதிவுகளின் பெரும் வலிமையாக இருப்பது இத்தகைய அரசியலையும், அரசியல் முரண்களையும் அடையாளம் கண்டுகொள்வதே. முந்தைய வரலாற்றுப் பதிவுகளின் பின்னே இயங்கிய மனமாக இருந்தாலும் சரி, அல்லது சமகாலத்திய நிகழ்வாக இருந்தாலும் சரி, அதனைப் பகுத்தாய்ந்து புரிந்துகொள்வதற்கான வசதியை இத்தகைய வலைப்பதிவுகள் அளிக்கின்றன. ஒரு ஆராய்ச்சியாளர் எவ்வாறு முன்முடிவுகளின்றியும் பக்கச் சார்புகளின்றியும் ஒரு சோதனையைச் செய்து, முடிவுகளை ஆராய்கின்றாரோ அத்தகைய முன்முடிவற்ற தன்மை அரசியற் பகுப்பாளர்களுக்குத் தேவை,
சமன்செய்து சீர்தூக்கும் கோல்போலமைந்து ஒருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி
என்ற வள்ளுவத்தின்படி அத்தனைக் காரணிகளையும் எடுத்துக்கொண்டு பகுத்தாய வேண்டிய கடப்பாடு இவர்களுக்கு உண்டு. தமக்குச் சாதகமானவற்றைக் காட்டியும், சாதகமற்றவற்றை மறைத்தும் பேசுவது நேர்மையாகாது. மேற்கண்ட குறளை வேறு ஒரு மாதிரியும் பொருள் கொள்ள வாய்ப்பினை வள்ளுவர் அமைத்திருக்கிறார். அது பின்நவீனத்துவவாதிகளின் கறுப்பு/வெள்ளைக் கோடுகளுக்கு இடையேயான கரைந்த பகுதியைக் குறிப்பிடுவதாகவும் கொள்ளலாம். 'ஒருபால் கோடாமை' என்ற காலத்தைக் குறிப்பிடாத தன்மையினால் (அதாவது பகுப்பாய்வுக்கு முன் அல்லது பின் என்ற காலம்) ஒரு கருத்தினைக் கேட்டதற்குப் பின்னும் அல்லது முன்னும், அனைத்துப் பக்கங்களையும் ஆய்ந்து அமையவேண்டும். எந்தப் பக்கத்தையும் தேர்ந்துவிடமுடியாது என்பதாகவும் அந்த அர்த்தம் இருக்கலாம். இது ஒரு குழப்பமான நிலையைத் தோற்றுவித்தாலும் முன்முடிவுகளால் கட்டப்பட்ட கறுப்பு/வெள்ளை நிலைகளை விட, இரண்டுக்கும் இடையே கரைந்துவிட்டதான ஒரு நிலை, தனிமனித வாழ்வுக்கு நேர்மையானதாகவே தோன்றுகிறது.
முனைவர் ரமணியின் உரை, ராமசாமியும் அவன் பெண்டாட்டியும் கதை ஒலி/ஒளித் தொகுப்பு, திராவிட இயக்க என்னும் பழி தாங்கும் மாயப் பிசாசு, ஒரு பெண்ணைக் கொலை செய்தோம், அறிவு சீவிகளும் சாகக் கொடுக்கும் உயிர்களும், தெருவுல ஓடுற நாயி... என்று பட்டியல் நீள்கின்றது. இவற்றினை உள்வாங்கிக் கொள்வது சமகாலத்தின் குமுக அமைப்புகளில் தேங்கியிருக்கும் அரசியல் தன்மைகளைச் சுட்டிக் காட்டுகின்றனவாக இருக்கின்றன.
பூங்காவுக்காக சிறப்புச் செவ்வியைத் தந்திருக்கும் முனைவர் இளங்குமரனார் ஐயா அவர்களுக்கு உங்கள் சார்பில் நன்றி. விபுலாநந்த அடிகளாரின் நினைவுநாளை முன்னிட்ட கானா பிரபாவின் இடுகை ஈழத்து இலக்கியத்துக்கு மட்டுமல்லாது, ஒட்டுமொத்த தமிழ் இலக்கியத்துக்கே குறிப்பிடத்தகுந்த ஒருவரை நினைவுகொள்ள வைத்திருக்கிறது, தமிழ்மணம் வாசிப்பில் இவ்வாரம் தன்னைக் கவர்ந்த பதிவுகளைப் பற்றி எழுதியிருக்கிறார் வசந்தன்.
இவற்றைத் தவிர, புகைப்படங்களை அழகியதாகக் கொண்ட இடுகைகளையும், மனதை நெகிழவைக்கும் இடுகைகளையும் தாங்கி இவ்வாரப் பூங்கா வெளிவருகிறது. பங்களித்த அனைவருக்கும் நன்றி!
|