இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
தமிழ் தேசியம் : ஒரு வறட்டு (தேசிய)வாதம் Print E-mail
தமிழ்சசி   

குழலி, அசுரன் இருவரும் மகஇக குறித்தும், தமிழ் தேசியவாதிகள் குறித்தும் சில கருத்துக்களை முன்வைத்து இருந்தார்கள். அதில் அவர்கள் எழுதியிருந்த தமிழ் தேசியம் குறித்து மட்டும் எனது சில கருத்துக்கள்...

ஈழத்தைச் சார்ந்த தமிழ் தேசியத்திற்கும், தமிழகத்தில் எழுந்த தமிழ் தேசியத்திற்கும் பெருத்த வேறுபாடுகள் உள்ளன. ஈழத்தில் தமிழ் மக்கள் இன ரீதியாக அவர்கள் தமிழராக இருக்கும் பொருட்டு ஒடுக்கப்பட்டனர். அதனால் ஈழத்தைச் சார்ந்த தமிழ் தேசியம் என்பது சிங்கள பேரினவாதத்திற்கு எதிரானது எனக்கொள்ளலாம். இலங்கையில் நடப்பது "வர்க்க போராட்டம்" மட்டுமே என்னும் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை.

இந்தப் பதிவில் தமிழகத்தைச் சார்ந்த தமிழ் தேசியம் குறித்து மட்டும் எனது சில கருத்துக்களை முன்வைக்கிறேன். ஈழம் குறித்து மற்றொரு பதிவில் எழுத உள்ளேன். தமிழ் தேசிய அபிமானம், இந்திய தேசிய அபிமானம் என்ற இரு வேறு நிலைப்பாட்டிற்க்குள்ளும் சில காலம் சுழன்றுள்ளதால் அதன் அரசியல்களை நான் அறிந்த வகையிலேயே இந்தப் பதிவில் முன்வைக்கிறேன்.

இனரீதியாக எந்த ஒடுக்குமுறையையும் சந்திக்காத ஒரு சமூகத்தில் இருந்து எழும் தமிழக, இந்திய தேசியவாதத்திற்கும் ஈழம், காஷ்மீர் போன்ற சமூகத்தில் எழும் தேசியவாதத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.

தமிழகம் சார்ந்த தமிழ் தேசியம் மற்றும் இந்திய தேசியவாதம் என்பது அரசியல், பொருளாதார மற்றும் சமூக ரீதியில் விடுதலைப் பெற்ற ஒரு இனம் முன்னெடுப்பதே ஆகும். இன ரீதியாக எந்த ஒடுக்குமுறையையும் சந்திக்காத நிலையில் இருக்கிற ஒரு சமூகம் தான் இவ்வாறான தேசியத்தினை முன்னெடுக்கிறது. அது போலவே ஒடுக்கப்பட்ட ஒரு சமூகம் அந் நிலையில் இருந்து விடுதலை அடைந்த பின்பு முன்வைப்பதும் தேசியவாதமே...

தன்னுடைய வாழ்க்கைக்கான வாழ்வியல் தேவைகள், சமூக, பொருளாதார விடுதலை குறித்த போராட்டத்தில் இருக்கும் எந்த ஒரு இனமும் தேசியம் குறித்து உணர்ச்சிவயப்பட்டு பார்ப்பது இல்லை. அது குறித்து சிந்திப்பதும் இல்லை. இந்திய வரலாற்றில் கூட காந்தி முதலில் இந்திய விடுதலை, இந்திய தேசியம் போன்றவற்றை மறுக்கிறார். மக்கள் சமூக விடுதலையை பெற வேண்டும் என்றே சிந்திக்கிறார். ஆங்கிலேயரின் கைகளில் இருக்கும் ஆட்சியை இந்திய பேரிஸ்டர்களிடம் கொண்டு வருவதால் சமூக ரீதியில் எந்த மாற்றமும் ஏற்படாது என்றே காந்தி நினைத்தார். ஆனால் பின் அவர் இந்திய தேசிய சூழலில் சிக்கிக்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

தந்தை பெரியார் தேசியத்தை கடுமையாக எதிர்க்கிறார். பெரியார் கூறுகிறார்.

தேசிய உணர்ச்சி என்பதானது இன்று உலகப் பொதுமக்கள் அதாவது உலகில் எங்கும் பெரும்பான்மையான மக்கள் பாமரராயும், தொழில் இன்றியும், தொழில் செய்தாலும் ஜீவனத்திற்க்கும் வாழ்விற்க்கும் போதிய வசதிகள் இன்றியும் கஷ்டப்படும் மக்கள் ஒன்று சேர்ந்து தங்களுடைய நிலைமைக்குப் பரிகாரம் தேடுவதைத் தடைப்படுத்தவும் ஆங்காங்குள்ள செல்வந்தர்களாலும் அதிகாரப்பிரியர்களாலும் சோம்பேறி வாழக்கைச் சுபாவிகளாலும் கற்பிக்கப்பட்ட சூழ்ச்சியாகும். தேசியம் என்பதும் மனிதனுக்கு ஒரு மயக்கமும் வெறியும் உண்டாக்கும் வார்த்தையாக ஆகிவிட்டது


*************

இந்திய தேசியம் எப்படி இந்துத்துவா சார்ந்த பார்ப்பனியத்தால் கட்டமைக்கப்பட்டுள்ளதோ, அது போல தமிழ் தேசியம் என்பது தமிழகம் சார்ந்த மேட்டுக்குடி மற்றும் பிற சாதி இந்துக்களால் முன்னெடுக்கப்பட்டதே ஆகும்.

இதன் ஆரம்பகட்டம் நீதிக்கட்சி மேட்டுக்குடியினரால் முன்னெடுக்கப்பட்டது. பிராமணர் அல்லாதோர் என்பதாக தொடங்கி பிராமணர் அல்லாத சமூகங்களின் சமூக விடுதலையையே நீதிக்கட்சி முன்னிறுத்தியது. இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. நீதிக்கட்சி சமூக விடுதலையை முன்னெடுக்கையில் சமூக விடுதலையை அடைந்த பிராமணர் சமூகம் காங்கிரஸ் மூலமாக தேசிய விடுதலையை முன்வைக்கிறது.

பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் சில மேட்டுக்குடி சமூகங்கள் சமுக ரீதியிலும், அரசியல் ரீதியிலும் முன்னேற்றம் அடைந்த பின்பு திராவிட தேசம், தமிழ் தேசம் போன்றவற்றை முன்வைக்கின்றனர். அது இன்னும் சற்று வளர்ச்சி பெற்று தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் வரை தமிழ் தேசியத்தை முன்னிறுத்தும் திமுக, ஆட்சியை பிடித்த பின்பு இந்திய தேசியத்தில் தன்னை இணைத்துக் கொள்கிறது.

தமிழகத்தில் உள்ள அனைத்து சமுதாயத்தினருக்கும் இடையே ஒரு சரிசமமான சமூக, பொருளாதார சூழல் இல்லாத நிலையில், தமிழன் என்பதால் இந்தியாவில் தமிழ் இனம் எந்த ஒரு இன அழிப்பிற்கு உள்ளாகாத நிலையில் தமிழ் தேசியத்தை முன்நிறுத்துவது தேவையற்ற ஒன்று.

தமிழ் இனத்தில் இருக்கின்ற பல்வேறு சமூக பிளவுகளை நீக்காத வரையில் தமிழ் தேசியம் என்ற ஒன்றை அடையுவும் முடியாது. அது மட்டுமில்லாமல் சமூக ரீதியிலான ஒடுக்குமுறை தமிழ் தேசியத்தை முன்னிறுத்திய திமுக ஆட்சிக் காலத்திலும், தமிழ் தேசியத்தை முன்னிறுத்தும் கட்சிகளிடையேயும் கடந்த காலங்களில் இருந்தததை கவனிக்கும் பொழுது தமிழ் தேசியத்தில் இருக்கும் போலித்தனம் தெரியும். இந்தக் காரணங்களாலேயே இந்திய தேசியத்தினை எதிர்ப்பது போல தமிழ் தேசியத்தையும் எதிர்க்க வேண்டிய தேவை உள்ளது.

கடந்த காலங்களில் திமுக சமூக விடுதலையை முன்னெடுத்தாலும் அந்தச் சமூக விடுதலையின் பலனைப் பெற்றவர்கள் தமிழகத்தைச் சார்ந்த மேல்தட்டு பிற்படுத்தப்பட்ட சமுகத்தினரே. மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் மக்கள் சமூக, பொருளாதார விடுதலையை பெற முடியாத சூழலே நிலவி வந்தது. தமிழக சமூக நிலையில் இருக்கும் சாதிப் பிளவுகளும் தலித் மக்களுக்கு எதிராக தொடர்ச்சியான சாதி இந்துக்களின் சாதி வெறித்தனமும் இன்றளவும் தொடர்ந்து கொண்டே தான் உள்ளது.

கீழ்வெண்மணி சம்பவம் நடந்தது கூட சமூக நீதி முன்னெடுக்கப்பட்டு ஓரளவிற்கு வளர்ந்த காலக்கட்டத்தில் தான் என்பதும் திமுக அப்பொழுது ஆட்சியில் இருந்தது என்பதும் பிற்படுத்தப்பட்ட மேட்டுகுடியினர் எவ்வாறு தலித் மக்களை ஒடுக்கினர் என்பதையும் புரிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது. (இது குறித்த விரிவான பதிவு).



கீழ்வெண்மணி சம்பவத்தினை பிராமண அறிவுஞீவிகள் வர்க்க போராட்டமாக முன்னெடுக்கின்றனர். சில அறிவுஞீவிகள் அதனை பிற்படுத்தப்பட்ட மேட்டுக்குடியினருக்கு எதிராகவும் பயன்படுத்திக் கொள்கின்றனர். என்றாலும் கீழ்வெண்மணி உள்ளிட்ட சம்பவங்கள் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் மக்களை ஒரே அணியில் திரட்டுவதற்கும், இவர்கள் அனைவரையும் தமிழ் தேசியம் என்னும் தட்டையான வடிவத்தில் அடக்க முனைவதற்கும் எதிராகவே உள்ளது.

கீழ்வெண்மணி சம்பவத்தில் தந்தை பெரியாரின் கருத்துக்கள் கூட தெளிவற்றவையாகவே இருந்தன. கீழ்வெண்மணி குறித்த பெரியாரின் அறிக்கை. ரோசாவசந்த்தின் கருத்து - http://rozavasanth.blogspot.com/2006/12/blog-post.html

கீழ்வெண்மணி நடந்து பல்லாண்டுகளுக்கு பிறகும் கூட மேலவளவு, கொடியங்குளம், மாஞ்சோலை என தமிழகத்தில் அரசு மற்றும் சாதி இந்துக்களின் தாக்குதல் தலித் மக்களுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ளது. இதனை முதலாளி, தொழிலாளி என்பதாக பார்த்தாலும் கூட பாதிக்கப்பட்ட அனைவருமே தலித் சமூகத்தினர் என்பதையும், தாக்குதல் தொடுத்தவர்கள் மேல்தட்டு மற்றும் இடைநிலை பிற்படுத்தப்பட்டவர்கள் என்பதையும் கவனிக்கும் பொழுது தமிழகம் எந்தளவுக்கு சாதி ரீதியில் பிளவு பட்டு நிற்கிறது என்பது தெளிவாகிறது.

(தமிழகத்தில் தலித்துகளின் நிலை என்ற பிபிசியின் பெட்டக தொடர் - http://www.bbc.co.uk/tamil/highlights/story/2006/03/060314_dalit.shtml)





வடமாவட்டங்களில் இன்றளவும் இரட்டை டம்ளர் முறை இருப்பதை பிபிசி தொடர் உறுதிப்படுத்துகிறது. தமிழ் பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரில் திருமாவும், ராமதாசும் தமிழ் தேசியத்தை முன்னிறுத்திலும் இன்னமும் சாதி ரீதியிலான அடக்குமுறைகள் தொடருகின்றன என்கிற கூற்றும் மேலே உள்ள பெட்டகத்தொடரில் எதிரொலிக்கிறது.

இவ்வாறு தலித் மக்கள் தொடர்ந்து அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதால் எவ்வாறு பிற்படுத்தப்பட்ட மக்கள் பார்ப்பனியத்தை எதிர்க்க வேண்டிய தேவையை முன்வைக்கின்றனரோ, அது போலவே தலித் மக்கள் பிற சாதி இந்துக்களான ரெட்டியார், நாயுடு, முதலியார், வன்னியர், தேவர் போன்றோரை எதிர்க்க வேண்டிய அவசியத்தை முன்வைக்கின்றனர்.

இவ்வாறான நிலையில் தான் பார்ப்பனத்தலைமை என்பது 200% நம்பிக்கைக்குரியதாக இருக்க வேண்டும் என்ற கருத்து தலித் மக்களின் பார்வையில் பெரும் முரண்பாடாகிறது. உண்மையில் சாதி இந்துக்களின் தலைமை 200% தலித்களைச் சார்ந்து இருந்தால் கூட அதனை நம்பமுடியாத நிலையில் தான் தலித் மக்கள் உள்ளனர். அந்தளவுக்கு தலித் சமூகத்திற்கும் பிற இடைத்தட்டு மற்றும் மேல்தட்டு பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு இடையேயான இடைவெளி உள்ளது.

அரசியல் காரணங்களுக்காக தலித் மக்களுக்கும் பிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் இடையே சுயநலக்காரணங்களால் முன்னெடுக்கப்பட்ட
கூட்டணி எவ்வாறு தோல்வி அடைந்தது என்பதை தமிழகத்திலும் பார்க்க முடியும், பிற மாநிலங்களிலும் பார்க்க முடியும். தமிழகத்தில் தலித் மக்களிடையேயான கூட்டணியை முன்வைத்த டாக்டர் ராமதாஸ் தோல்வி கண்டார். அவரிடம் கூட்டணி வைப்பதை தலித் மக்கள் விரும்பவில்லை. இதைப் போலவே உத்திரபிரதேசத்திலும் மாயாவதி - முலயாம் சிங் யாதவ் இடையேயான கூட்டணி முறிந்து போயிற்று. தலித் மக்கள் நேரடியாக தங்களை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கிய ஒரு சமூகத்தினை ஏற்க மறுக்கின்றனர். அதே சமயத்தில் தலித் மக்களை "நேரடியாக" ஒடுக்குமுறைக்கு உள்ளாக்காத பார்ப்பனர்களை ஏற்க தலைப்படுகின்றனர். தலித் விடுதலையை முன்னெடுக்கும் பார்ப்பன அறிவுஞீவிகளை தலித் மக்கள் ஏற்றுக்கொள்வதையும் பார்க்க முடிகிறது. உத்திரபிரதேசத்தில் மாயாவதி பிராமணர்களிடையேயான கூட்டணி மூலமும் காண முடிகிறது.(இது குறித்து எனக்கு சில விமர்சனங்கள் உள்ளது. அது மற்றொரு தருணத்தில்...)

தலித்களுக்கும் மேல்தட்டு மற்று இடைநிலை பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரிடையேயான பிரச்சனை இவ்வாறு உள்ளது என்றால், பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்குள்ளும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கவே செய்கின்றன. திராவிட இயக்கங்கள் முன்னெடுத்த சமூக நீதியால் அதிகம் பலன் பெற்றவர்கள் மேல்தட்டு பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரே. இதனால் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் பொருளாதார ரீதியிலான விடுதலையை பெற முடியவில்லை. இதன் தொடர்ச்சியாக பல சமுதாயங்கள் முன் வைத்த போராட்டங்களால் 1989ல் தான் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கான 20% இடஒதுக்கீட்டினை அப்போதைய திமுக அரசாங்கம் கொண்டு வந்தது. இது பாமக தொடங்கிய காலக்கட்டத்தில் சில அரசியல் காரணங்களுக்காக, தன்னுடைய ஓட்டு வங்கியை தக்கவைக்க திமுக கொண்டு வந்தது. 1989க்குப் பிறகு தான் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் ஓரளவுக்கு பொருளாதார விடுதலையை பெற தொடங்கியுள்ளனர்.

தலித் மக்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் என அனைவருமே தங்களுக்கான முழுமையான பொருளாதார விடுதலையை பெறாத வரையில் தமிழ் தேசியம் என்பதை முன்னெடுப்பது அவசியம் இல்லாததும், தேவையற்றதும் ஆகும்

*************

தமிழ் தேசியம் குறித்து பார்க்கும் பொழுது அது குறித்த சில அரசியல்களையும் கவனிக்க வேண்டும். தமிழகத்தை சார்ந்த தமிழ் தேசியம் இரு முக்கிய காரணங்களால் வெளிப்பட்டதாக பார்க்கலாம்
  • பார்ப்பனியத்திற்கு எதிரான திராவிட தேசியம்
  • ஈழப் பிரச்சனையை சார்ந்து எழுந்த தமிழ் தேசியம்/தனித்தமிழ்நாடு

பார்ப்பனியத்திற்கு எதிராக எழுந்த தமிழ் தேசியம் தமிழகத்தின் பெரும்பாலான சமூகங்களை உள்ளடக்கவில்லை. அது போலவே ஈழப் பிரச்சனையை சார்ந்து எழுந்த தமிழ் தேசியம் தமிழகத்தினைச் சார்ந்து எழ வில்லை.

தமிழகத்தில் தமிழின தேசியவாதிகளின் தற்போதைய தலைவராக பலராலும் முன்நிறுத்தப்படுபவர் பழ.நெடுமாறன் அவர்கள். பழ.நெடுமாறன் காங்கிரஸ் இயக்கத்தில் இருந்தவர். இந்திய இராணுவம் சார்ந்த இந்திய தேசியவாதத்தை இந்தியாவில் மட்டுமில்லாமல் அண்டை நாடுகளிலும் முன்னெடுத்த இந்திரா காந்தியை தனது தலைவராக கொண்டவர். அவர் இந்திய தேசியத்திற்கு எதிராக ஈழப் பிரச்சனை வரை பெரிதாக எதையுமே முன்னெடுக்க வில்லை. ஈழப் பிரச்சனைக்குப் பிறகு நெடுமாறன் புலிகளுடன் கொண்ட நெருக்கத்தின் காரணமாகவே தமிழ் தேசியத்தினை முன்னெடுக்க தொடங்குகிறார். அவர் முன்னெடுக்கும் தமிழ் தேசியத்திற்கு எந்த ஒரு அடிப்படைக் காரணமும் தமிழகத்தைச் சார்ந்து இல்லை (இது குறித்த சுகுணா திவாகரின் பதிவு)

இன்னும் சொல்லப்போனால் நெடுமாறன் உள்ளிட்டோர் முன்வைத்த தமிழ் தேசியவாதம் மற்றும் அப்பொழுது வடமாவட்டங்களில் தோன்றிய முந்திரிக்காட்டு போராளிகள் முன்வைத்த தனித்தமிழ்நாடு போன்றவை சோ போன்ற மேல்தட்டு வர்க்கத்தினருக்கு ஈழப்பிரச்சனையை எதிர்க்க ஒரு முக்கிய ஆயுதமாகவும் ஆயிற்று. அதை ஒரு வாய்ப்பாக வழங்கியவர்கள் கூட தமிழக தமிழ் தேசியவாதிகளே.

வடமாவட்டத்தின் ஒடுக்கப்பட்ட மக்களின் ஏழ்மை நிலையின் பொருட்டு தொடங்கப்பட்ட இடதுசாரி போராட்டக்குழுக்கள் பின் ஈழப்பிரச்சனையின் உச்சத்தில் தங்களை தமிழ் தேசியத்துடன் இணைத்துக்கொண்டது எந்த வகையிலும் பொருத்தமில்லாதது. இவர்கள் போராட தொடங்கியது எந்த மக்களை முன்னிட்டோ அதே மக்களை நட்டாற்றில் விட்டு விட்டு தமிழ் தேசிய நீரோடையில் தங்களை இணைத்துக் கொண்டனர். இன்னும் சொல்லப்போனால் இந்த இடதுசாரிக்குழுக்கள் யாரை எதிர்த்து போராட தொடங்கினார்களோ அவர்களிடமே தமிழ் தேசியம் என்ற பெயரில் கலக்க முற்பட்டனர். அந்த வகையில் புலவர் கலியபெருமாள் மற்றும் 1980களில் இருந்த இடதுசாரி குழுக்கள் ஒரு குழப்பான நிலையையே முன்நிறுத்தினர்.

அக் காலகட்டத்தில் வடமாவட்டத்தில் வன்னியர்களின் இடஒதுக்கீட்டினை முன்வைத்து வன்னியர் சங்கம் தொடங்கிய டாக்டர் ராமதாஸ் தமிழ் தேசியத்தை முன்வைக்க வில்லை. மாறாக அவர் கோரியது வன்னியர்களுக்கான தனி மாநிலம். டாக்டர் ராமதாசின் தனி மாநில கோரிக்கை தமிழ் தேசியத்தை பிளக்கும் பிரிவினைவாதம் என்று தமிழ் தேசியவாதிகள் அப்பொழுது சாடினர். பின்னாளில் வன்னியர் சங்கத்தை பாமக என்ற அரசியல் கட்சியாக மாற்றிய டாக்டர் ராமதாஸ் தமிழ் தேசியத்தை தூக்கிப் பிடிக்கிறார்.

தலித் மக்களின் சமூக விடுதலையை முன்னெடுத்த திருமா, பின் தன் அரசியல் தேவைகளுக்காக தலித் மக்களை தொடர்ந்து சமூக ரீதியாக நசுக்கும் ஆதிக்க சாதியினருடன் இணைந்து தமிழ் தேசியத்தை முன்னிறுத்துகிறார்.

இவ்வாறு தொடர்ச்சியாக தமிழ் தேசியம் என்பது அரசியல் தேவைகளுக்காகவே முன்நிறுத்தப்பட்டுள்ளது. அதுவும் ஈழப் பிரச்சனை வரும் பொழுதெல்லாம் தமிழ் தேசியம் முன்னிறுத்தப்படுவது தமிழக அரசியல்வாதிகளின் வாடிக்கையான ஒன்று. இது தமிழக மக்களுக்கு விரோதமானது மட்டுமல்ல. ஈழ மக்களுக்கும் எதிரானது. கலைஞர், வைகோ, ராமதாஸ், திருமா என அனைவருமே தங்களை அதிகார மையங்களில் நுழைத்துக் கொள்ளும் பொழுது இந்தப் பிரச்சனையை வசதியாக மறைப்பதையும், தேவைப்படும் தருணங்களில் முன்வைப்பதையுமே நாம் காணக்கூடியதாக உள்ளது.

*************

என்னுடைய கடந்த சில பதிவுகளில் நான் "தமிழ் தேசிய இனம்" என்ற கருத்தை முன்வைத்திருக்கிறேன். தமிழன் என்னும் தேசிய இனத்தின் தனித்தன்மையை சிதைக்க முனைவதை நான் எதிர்க்கிறேன். இந்தியாவில் இருக்கும் பல தேசிய இனங்களின் பன்முகத்தன்மை பராமரிக்கப்பட வேண்டிய அவசியமும், தேவையும் உள்ளது. தேசிய இனங்களின் பன்முகத்தன்மையை தட்டையாக இந்தியன் என்ற வடிவத்தில் அடக்க முனைவது எதிர்க்கப்பட வேண்டியது.

அதே நேரத்தில் அந்த தேசிய இனங்களைச் சார்ந்த "பிரிவினையை" இன ரீதியாக அடக்குமுறை இல்லாத இந்தியச் சூழலில் முன்னிறுத்தப்படுவதை எதிர்க்க வேண்டிய தேவையும் உள்ளது. இதில் சில விதிவிலக்குகளை காஷ்மீர் போன்ற பிரச்சனைகளில் வழங்க முடியும். காரணம் காஷ்மீர் என்னும் தேசிய இனம் இந்தியா, பாக்கிஸ்தான் என இரு வேறு நாடுகளிடையே பிரிக்கப்பட்டுள்ளது. அந்த தேசிய இனத்தை இணைக்க காஷ்மீரின் சுயநிர்ணயத்தை ஆதரிக்க வேண்டிய தேவை எழுகிறது.

ஆனால் தனித்தமிழ்நாடு என்பதோ, தமிழ் தேசியம் மூலம் வைக்கப்படும் பிரிவினைவாதமோ ஒப்புக்கொள்ளத்தக்கதல்ல. காரணம் இன்று பார்ப்பனியத்தை சார்ந்து முன்வைக்கப்படுகிற வாதங்கள் நாளை தமிழ் தேசியத்தை சார்ந்த மேட்டுக்குடியினரிடமும் முன்வைக்க முடியும். தமிழ் சமூகத்தில் இருக்கும் சாதிப் பிரிவுகளை கலைவதும், அனைத்து பிரிவினரும் பொருளாதார விடுதலையை பெறுவதும், சாதியினை மறுப்பதுமே தற்போதைய அவசியமான தேவையாகிறது. அவ்வாறு சாதியற்ற சமுதாயம் உருவாகும் நிலையில் தான் தமிழன் என்ற இனம் எந்த ஒரு பிளவும் இல்லாமல் உருவாக முடியும்.

அது மட்டுமில்லாமல் தனித்தமிழ்நாடு போன்றவை நடைமுறைச் சாத்தியமும் இல்லை. இவ்வாறான நிலையில் தேவையற்ற பிரிவினையை பேசி மக்களின் அடிப்படை வாழ்வியல் மற்றும் சமூகத்தேவைகளை புறக்கணிப்பது மக்கள் விரோதப் போக்கு என்றே நான் நினைக்கிறேன்.

எந்த தேசியங்களை விடவும் மக்கள் முக்கியமானவர்கள்.

http://blog.tamilsasi.com/2007/07/tamil-nationalism-in-tamil-nadu.html

 
Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)