வணக்கம் நண்பர்களே,
போன பதிவில் “மலேசியா பழங்களின் அரசன் டுரியான்” பற்றி பல சுவையான தகவல்களை அறிந்து கொண்டோம்.நாரதர் கலகம் மாதிரி அனைவரும் புது புது தகவல்கள் தந்து எங்களை எல்லாம் கதி கலங்க செய்து விட்டீர்கள்.ஆனால் நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பது போல இந்த கலகத்திலிருந்து நம்மால் பல புது தகவல்களைப் பகிர்ந்து கொள்ள முடிந்தது.ஆனால் எல்லாரும் நான் கேட்ட கேள்வியை மறந்து நீங்கள் பல கேள்விகளை டுரியான் பழத்தைப் பற்றி கேட்க ஆரம்பித்து விட்டீர்கள்.
நான் கேட்ட கேள்வி
“பழங்களின் அரசன் டுரியான்.அப்பொழுது அரசி எந்த பழம்?”
கடைசி வரையில் யாருமே பதில் சொல்லவில்லை.அந்த துக்கத்தில் நான் 3 மாதமாக சாப்பிட்டவில்லை,தூங்கவில்லை, என்று பொய் சொல்ல மாட்டேன்.யாரும் பதில் சொல்லவில்லை என்றாலும் உங்களை நான் விட போவது இல்லை,போன தடவை நம் Hero டுரியானைப் பற்றி அறிந்து கொண்டோம்,இம்முறை Heroine மங்குஸ்தீன் பழத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம்.பழங்கள் அரசி மங்குஸ்தீன் எப்படி இருக்கும்?

படத்தைப் பார்த்தீர்கள் இல்லையா?இதுதான் அரசியார் மங்குஸ்தீன் அவர்கள்
இந்த பழத்தின் தனிதன்னமை வாய்ந்த சுவைக்காக இதற்கு பழங்களின் அரசி மற்றும் "தேவலோக பழம்" என்று கூட அழைக்கப்பட்டது.மங்குஸ்தீன் பழம் தென் கிழக்கு ஆசியாவில் வளரும் ஒரு வகை பழம்(tropical fruit).டுரியான் பழம் குளிர்ச்சி என்றால்,மங்குஸ்தீன் பழம் வெப்ப தன்மையை கொடுக்கும் என்று நம்படுகின்றது.
இதற்கும் விக்டோரியா மகாராணிக்கும் நெருங்கிய சம்பந்தம் உள்ளது.அது எப்படி என்றால் விக்டோரியா மகாராணி இந்த பழத்தைப் பற்றி கேள்விப்பட்டு இதை கொண்டு வருபவர்களுக்கு அந்நாட்டின் உரிய பட்டமான "வீரத்திருத்தகைப் பட்டம்"(knighthood) அளிப்பதாக வாக்குறுதி தந்தாராம்.ஆனால் யாராலும் இந்த பழத்தை கொண்டு வரமுடியவில்லை.இந்த பழத்தை வாரக்கணக்கில் கடுமையான தட்பவெட்ப சூழ்நிலை மாற்றங்களில் இருக்க முடியதினால்,இதை இங்கிலாந்திற்குக் கொண்டு செல்ல முடியவில்லை என்று ஒரு கதை இருக்கின்றது.இந்த பழங்கள் தென்கிழக்கு ஆசியாவின் தட்ப வெப்ப நிலைகளில் தான் இருக்க முடியும்.இங்கிலாந்து அரசியே விரும்பி கேட்ட பழம் என்பதால் அதற்கு பழங்களின் அரசி என்ற பெயர் வந்தது என்று சொல்கின்றார்கள்.இந்த கதையில் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.ஆனால் கதை நன்றாக இருக்கின்றது இல்லையா?
மங்குஸ்தீன் பழத்தின் வெளித்தோற்றம்

பழத்தின் உள் தோற்றம்.பழங்கள் டுரியானைப் போல சுளைகளாக இருக்கும்.ஆனால் வெண்மையான சுளைகள்.உள்ளே சிறிய கொட்டைகள் இருக்கும்.ஒரு மங்குஸ்தீன் பழம் ஆரஞ்சு பழத்தின் அளவிற்கு இருக்கும்.
இந்த பழத்தின் சுவை இனிப்பும்,கொஞ்சம் துவர்ப்பும் மற்றும் புளிப்பும் கலந்து இருக்கும்.இந்த பழங்களைச் சிறு வயதில் சாப்பிடும் பொழுது அம்மாவிடம் பல முறை அடிவாங்கி இருக்கின்றேன்.அது இந்த பழங்களை உரித்து சாப்பிடும் பொழுது அதன் தோல்களில் இருந்து வரும் ஒரு வகை சாறு சட்டைகளில் பட்டால் கறை படிந்து விடும்.இந்த கறைகள் எல்லாம் போக்கவே முடியாது.அம்மா மங்குஸ்தீன் பழம் வாங்கி வந்தால் பழைய சட்டை எல்லாம் தேடி கண்டுப்பிடித்து,அதை அணிந்துக் கொண்டு சாப்பிடும் அளவிற்கு எல்லாம் பொறுமைசாலி நான் இல்லை.எப்படிதான் கவனமாக சாப்பிட்டாலும் சட்டையில் கறைப்படியும்,அம்மாவிடம் அடியும் கிடைக்கும் (இது எல்லாம் அரசியலில் சாதாரணம்ப்பா)
மங்குஸ்தீன் மரங்கள் பழங்களைக் கொடுக்க 7லிருந்து 9 வருடங்கள் ஆகும்.ஆனால் அதன் பிறகு சில மரங்கள் 100 வருடம் வரை பழங்களைக் கொடுக்குமாம்!!!!!!
6 மாதத்தில் மங்குஸ்தீன் செடிகள்

2 வருடத்தில்...

6வருடங்களில்
பூவாகி.....காய் ஆகும் பழம்
  
பழம் இப்பொழுது நன்றாக தெரிகின்றது.அதன் கீழ்ப்பகுதியில் உள்ள பூப் போன்று இருக்கின்றதே...தெரிகின்றதா?அதை வைத்து பழத்தின் உள்ளே எத்தனை சுளைகள் இருக்கின்றது என்று தெரிந்துக் கொள்ளலாம்.இந்த பழத்தின் உள்ளே ஒரு 6 சுளைகள் இருக்கும். இதைப் பார்த்து அதிக சுளைகள் உள்ள பழத்தை நாம் தேர்ந்து எடுக்கலாம்.
பழமாகும் காய்
   பழுத்த பழம் ஊதா நிறத்தில் இருக்கும்....
சரி இப்பொழுது முக்கியமான விஷயம்.மங்குஸ்தீன் பழத்தை எப்படி சாப்பிடுவது?(வாயால் தான் என்று என்னை மாதிரி அறிவு ஜீவிகள் கிண்டல் பண்ண வேண்டாம்.)
மங்குஸ்தீன் பழத்தைக் கைகளாலே உரித்து சாப்பிடலாம்.பழத்தை மேசை மேல் வைத்து,அதை உள்ளங்கையால் அமுக்கினால் பழம் பிளக்கும்.இந்த மாதிரி வீர சாகசம் செய்து உங்கள் வலிமையைக் காட்ட முடியவில்லை என்றால் சிறு கத்தியைக் கொண்டு பழத்தை பிளக்கலாம்.பழத்தின் மேற்புறத்தில் 1cm அளவிற்கு குறைவாக பழத்தைச் சுற்றி வெட்டவும்.மிகவும் ஆழமாக வெட்ட வேண்டாம்.இப்படி செய்தால் பழம் இரண்டு பிரிவாக பிரியும்.(கீழே உள்ள படத்தைப் பாருங்கள்).ஆனால் கவனம் தேவை.நான் முன் சொன்னது போல இந்த பழங்களில் சாறு பட்டால் அந்த கறை போகாது.நான் எல்லாம் என்றைக்குமே இந்த பழங்களை உரித்தது இல்லை.அதற்குதான் அம்மாவும் அண்ணாவும் இருக்கின்றார்களே.என் நல்ல சட்டையில் அழுக்கு படிய கூடாது.இது மாதிரி யாரவது கிடைத்தால் அவர்களிடமே இதை உரித்து தர சொல்லுங்கள்.ஹிஹி.சின்ன வயதில் வாங்கிய அடியால் இப்படி ஆகிவிட்டேன்.
உள்ளே இருக்கு கொட்டை கடினமாக இருக்காது.ஆனால் அதை சாப்பிடுவதைத் தவிர்த்து விடுங்கள்.மிகவும் கசப்பாக இருக்கும்.நன்கு பழுத்த பழங்கள் தான் இனிப்பாக இருக்கும்.காயாக இருப்பது சற்று துவர்ப்பும் புளிப்பும் கலந்து இருக்கும்.பழங்கள் ஊதா நிறத்தில் இருக்கும் பழங்களையே தேர்ந்து எடுக்கவும்.மங்குஸ்தீன் பழங்களைக் குளிர்சாதன பெட்டிகளில் வைக்க கூடாது.வாங்கிய சில நாட்களிலேயே சாப்பிட்டு முடித்து விட வேண்டும்.இல்லையென்றால் அதன் சுவை நன்றாக இருக்காது.

மேலும் விபரங்களுக்கு: http://www.hort.purdue.edu/newcrop/morton/mangosteen.html#Food%20Uses
நன்றி
http://ezinearticles.com/?Mangosteen---The-Queen-of-Fruits&id=94295

http://chitchatmalaysia.blogspot.com/2007/07/blog-post.html
|