|
முத்துலெட்சுமி
|

பேசாத வார்த்தைகளின் அழுத்தத்தில்
இதயம் கனத்துப்போகிறது.
உள்ளுக்குள் ஓடும் ஒலிகளின் பேரிரைச்சலில்
அருவிக்கரையாக காதடைக்கிறது.
பலமணித்துளிகள் காத்திருந்து திரை நீங்கிய
இறைகாட்சியாக கண்கள் மயங்குகிறது.
தன்னிச்சையாக ஓடும் சுவாசம்கூட
நீண்டு நீண்டு சிரமப்பெருமூச்சாய்.
மௌனம் கலை.
வார்த்தைகளை விடுதலை செய்..
எழுத்துக்கூட்டியேனும் பேசிவிடலாம்.
அந்த பேசாத வார்த்தைகள்
பின்னெப்போதாவது ஒரு மாலைநேரம்
எதிரில் உட்கார்ந்து கொண்டு
அன்றைக்கு ஏனப்படி
மௌனியாயிருந்தாயென்று
பாடாய்படுத்தாமல் இருக்கட்டும்.
நிலவு நேரத்தில் ஆந்தையைப்போல
உறக்கம் தொலைத்து அலைவானேன்?
மௌனம் கலை.
|