|
ஆசிரியர் குழு
|
பன்னாட்டு அரசியல் ஆராய்ச்சியாளர், பேராசிரியர், கல்வியாளர், எழுத்தாளர் மற்றும் மக்கள் வாழ்வுரிமைகளைக் காக்கும் களப் போராளி என பன்முகங்களைக் கொண்ட முனைவர் எஸ். பி. உதயக்குமார் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான தெற்காசிய சமூக மையம், ஆங்கிலத்தில் சுருக்கமாகச் சொல்லப் போனால் SACCER (South Asian Community Center for Education and Research) என்ற நிறுவனத்தை நாகர் கோயிலில் ஏற்படுத்தி அதன் மூலம் தன் பணிகளைச் செய்து வருகிறார். உதயக்குமாரின் அரசியல் ஆராய்ச்சிக் கட்டுரைகள் உலகெங்கும் பல்கலைக் கழகங்களில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள சில பல்கலைக் கழகங்களில் பன்னாட்டு அரசியல் குறித்து கோடைக் கால வகுப்புகள் எடுக்க ஆண்டு தோறும் வருகை தரும் பேராசிரியராக அழைக்கப் படுகிறார்.
தற்பொழுது இந்தியாவில் இருந்து கொண்டே ஓஹையோ மாநிலப்பல்கலைக்கழகத்தின் கிர்வான் இனப் படிப்பு மையத்தின் ஆராய்ச்சியாளராகப் பணிபுரியத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். அவருடைய பணிகள் தொடர்பாகவும், இந்தியாவின் வாழ்வியல் பிரச்னைகள் குறித்தும் பல பத்திரிகைக் கட்டுரைகளையும், நூல்களையும் எழுதியுள்ளார். பல ஆண்டுகளாக இந்திய அரசின் அணு ஆயுதம் மற்றும் அணுமின்சாரக் கொள்கைகளை விமர்சனம் செய்து வரும் உதயக்குமார் கூடங்கூளம் அணுமின் நிலையத்துக்கெதிராக வெகுமக்கள் போராட்டத்தை முன் நின்று நடத்தி வருகிறார். சேது சமுத்திரத் திட்டம் கடல் வாழ் உயிரினங்களின் ஏற்படுத்தப் போகும் சுற்றுப் புறச் சூழல் கேடுகளைக் கருதி, அத்திட்டத்தை விமர்சித்து வருகிறார். இவரும் இவர் மனைவி மீராவும் நாகர்கோயிலுக்கருகில் கிராமப் புறத்துக் குழந்தைகளும் தரமான கல்வியைப் பெறுவதற்கு நல்ல பள்ளிக் கூடம் ஒன்றை நிறுவி நடத்தி வருகின்றனர். ஆழிப் பேரலைகள் குமரி மாவட்டத்தைக் கடுமையாகத் தாக்கியழித்தபோது அம்மக்களிடையே அரும்பணியாற்றியவர். தொடர்ந்து பாதிக்கப் பட்டவர்களுக்காக நல்ல திட்டங்களையும் பயிற்சிகளையும் உருவாக்கி நடத்தி வருகிறார். பூங்காவிற்காக உதயக்குமார் அளித்த நேர்காணலை இங்கு அளிக்கிறோம்.
|