வித்துக்கள் தாம் முளைப்பதற்கும் வளர்வதற்குமான சக்தியைத் தன்னகத்தே கொண்டிருக்கின்றன. தம் மூதாதையர் தம் வாழ்விலிருந்து சேமித்துப் பதிந்த அனுபவங்களை மரபணுக்களின் வாயிலாகப் படித்துத் தம் வாழ்வினைத் தொடங்குகின்றன இவ்வித்துக்கள். தாம் ஒடுங்கிக் கிடந்த பாறையிடுக்குகளைப் பிளந்து போடும் வல்லமை இவ்வித்துக்களிலிருந்து தோன்றும் விளைவுக்குண்டு. பழுத்த கனிகளோடும் அவற்றிலிருந்து தோன்றும் எண்ணற்ற புது வித்துக்களோடும் அது தன்னினத்தைச் செழுமைப் படுத்திக் கொள்கிறது. உலகெங்கும் பரந்து விரிந்து கிடக்கும் தமிழினமும் ஒரு வித்தினைப் போலவே இடர்ப்பாடுகளைத் தாண்டி, தனைக் கவிக்கும் இருளைத்தாண்டி, மறைத்துக் கிடக்கும் பாறைகளைத் தாண்டி வளர்ந்து வருகிறது. இவ்வாறான முயற்சிகளில் சிலவற்றை இவ்வார பூங்காவில் தொகுத்திருக்கிறோம். அவற்றினுள் கலிபோர்னியப் பல்கலைக்கழகத்தின் (பெர்க்கலி) தமிழ் பீடத்தின் பத்தாவது ஆண்டு விழாவைக் குறித்த, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் தலைவர் தில்லை குமரன் அவர்களின் கட்டுரையும், எஸ்.பி. உதயக்குமார் அவர்களின் நேர்காணலையும் குறிப்பிடலாம். தன்னார்வலர்களின் கூட்டு முயர்ச்சியால் உருப்பெறும் விக்கிபீடியாவின் வளர்ச்சியைக் குறித்த சிறு குறிப்பும், திட்டமிடலின் மூலம் சிறந்த தமிழ் நிகழ்வுகளை நிகழ்த்த முடியும் என்பதற்கு உதாரணமாக சென்னை வலைப்பதிவர் பட்டறை குறித்த பதிவும், போராட்டக் காலத்திலும் நகைச்சுவையை வளர்த்த பாலச்சந்திரனின் நாடக முயற்சிகளைப் பற்றிய இடுகையும், சிறியனவாகத் தோன்றினாலும் ் தேவையான முயற்சிகளாக இருக்கும் குழந்தைப் பாடல் ஒன்றும் இவ்வாரத்தில் தொகுக்கப் பட்டிருக்கின்றன.
விளைகின்ற பயிரோடு களையாக இருப்பவற்றை இனங்கண்டு அவற்றைப் பிடுங்கி எறிவதன் மூலமும் விளையும் நம் பயிருக்கு உரம் சேர்க்க முடியும். அவ்வாறான களைகளை அடையாளம் காட்டும் இடுகைகளும் இவ்வாரத்தில் உண்டு. இவற்றைத் தொகுக்கும் நோக்கம் பகைமை பாராடுதல் அல்லவென்பதையும், அடையாளம் காணுதலும், புரிதலும் மேம்படவேண்டும் என்ற நோக்கத்திலேதான் என்பதை வாசகர்கள் புரிந்துகொள்ளவேண்டும். கோவி கண்ணண் எழுதிய தலித்துகளின் ஆலய நுழைவு, திருவின் நீதிமன்றங்கள்/நீதிபதிகள், மிதக்கும் வெளியின் முஸ்லிம்களுக்கான நியாயம், தெக்கிக்காட்டானின் வால்மார்ட், நாக இளங்கோவனின் இராமதாசின் பரட்டை அரசியல் ஆகியன பற்றிய இடுகைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. அத்தோடு நிகழ்ந்திருக்கும் சிதைவுகளைப் பார்ப்பதும், அவற்றிலிருந்து பாடங்களைப் படிப்பதுவும்கூட வளர்ச்சிக்குத் தேவையானது. இந்நோக்கில், இளாவின் சில சிதிலங்கள், அகிலனின் சின்னத்தாய் இவள் ஆகிய இடுகைகள் சேர்த்துக் கொள்ளப் பட்டிருக்கின்றன. சிறுகதை மற்றும் கவிதை முயற்சிகளாக கப்பி பய, கென், உடுவை, பொற்கொடி, மை ஃபிரண்ட் ஆகியோருடைய படைப்புகளும், சமூக அனுபவங்களாக சின்னக்குட்டி, பாரதி, பாரி அரசு ஆகியோருடைய இடுகைகளும், திரை விமரிசனமாக பரத்தின் இடுகையும் இடம்பெறுகின்றன. உலகின் பல பாகங்களிலுமிருந்து தமிழையும் தமிழினத்தையும் வளர்க்கப் பாடுபடும் அத்தனை நெஞ்சங்களுக்கும், அவர்களது முயற்சி எவ்வளவு சிறிதாயினும், பூங்கா தனது நன்றியைத் தெரிவிக்கிறது.
|