|
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க. |
|
|
|
தொண்டன்
|
திமுக ஆட்சிக்கு வருவது போல தெரிந்தால் திமுக கூட்டணியிலும், அதிமுக ஆட்சிக்கு வருவது போல தெரிந்தால் அதிமுக கூட்டணிக்கும் மாறுவது பா.ம.க.வின் பச்சோந்தி அரசியல். எதிர்காலத்தில் விஜயகாந்த் ஆட்சிக்கு வருவதாக தெரிந்தால் அவரோடும் கூட்டு சேர வெட்கம் கெட்ட பா.ம.க. தலைமைக்கு எந்த தயக்கமும் இருக்காது. கொள்கை, தமிழ் என்றெல்லாம் வீம்புக்கு முழங்கும் பாமக தேர்தல் நேரத்தில் மட்டும் கோவணத்தை கூட காற்றில் பறக்க விட்டு விடுவது தான் கடந்த கால வரலாறு.
திமுக ஆட்சிக்கு வந்தால் எதிர்ப்பு அரசியல் நடத்தி தங்கள் இயக்கம் தமிழனுக்காக குரல் கொடுப்பது போல காட்டிக் கொள்வதும், அதிமுக ஆட்சிக்கு வந்தால் மரவட்டை போல சூடு, சுரணையற்று சுருங்கிக் கொள்வதையும் பாமக தன்னுடைய அரசியல் நிலைப்பாடாக கொண்டிருப்பதை அரசியல் நோக்கர்கள் அறிவார்கள்.
நேற்று வந்த விஜயகாந்த் கூட கூட்டணி விவகாரத்தில் சொரணையோடு நடந்துகொள்வதை காணமுடிகிறது. 1998 பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக, 1999 பாராளுமன்றத் தேர்தலில் திமுக, 2001 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, 2004 பாராளுமன்றத் தேர்தலில் திமுக என்று எந்தவித இலக்கோ, அரசியல் நாணயமோ இன்றி இன்னமும் கிளைக்கு கிளை தாவும் அய்யாவை அரசியல் கட்சித் தலைவர்கள் வரிசையில் எங்கே வைப்பது என்றே புரியவில்லை. வைகோவாவது பரவாயில்லை. தோற்றுப் போனாலும் கூட்டணித் தலைமைக்கு விசுவாசமாக இருப்பார்.
98லும், 2001லும் குடும்ப அரசியல் என்று விமர்சித்தவர் சத்தமில்லாமல் தன் மகனை 2004ல் கொல்லைப்புற வழியாக பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைத்து அமைச்சராக்கி அழகு பார்த்தார். அதற்கு மட்டும் திமுகவின் தயவு தேவைப்பட்டது. நானோ, என் குடும்பத்தாரோ கோட்டைக்கு வரமாட்டோம் என்று சொன்ன வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டார்.
திமுக வன்முறை அரசியல் நடத்துகிறது என்று நாள்தோறும் செய்தியாளர்களை அழைத்து புலம்பும் டாக்டர் அய்யாவின் இயக்கத்தில் காடுவெட்டி குரு ஒரு சட்டமன்ற உறுப்பினர். காடுவெட்டி குரு, காந்திஜியின் அகிம்சா வழியில் அரசியல் நடத்துபவராக அய்யாவின் கண்களுக்கு தெரிகிறாரோ? வெட்டுவேன், குத்துவேன் என்ற வார்த்தைகளை நாம் அடிக்கடி பா.ம.க. மேடைகளில் கேட்க முடியும்.
பா.ம.க. நடத்தும் போராட்டங்கள் மக்களுக்கான போராட்டங்கள் என்று பா.ம.க.வினரே சொல்லிக் கொள்வது வழக்கம். ஆனால் மக்களோ அவை பொட்டி வாங்க நடத்தப்படும் போராட்டங்கள் என்று நன்கு உணர்ந்திருக்கிறார்கள். ரிலையன்ஸ் ப்ரெஷ் கடைகளை மூடக்கோடி போர்க்குணத்துடன் பா.ம.க. நடத்திய போராட்டம் என்னவாயிற்று என்று மக்கள் கேட்கிறார்கள். ரிலையன்ஸ் ப்ரெஷ் கடைகளை எல்லாம் மூடிவிட்டார்களா? பொட்டி கை மாறிவிட்டதா என்று தமிழகத்தின் தெருமுனை டீக்கடைகளில் கூட சத்தமாக பேசிக்கொள்கிறார்கள்.
டாடா மினரல் ஆலை வேண்டுமா என்று மக்களிடம் கருத்து கேட்க குழு அனுப்புகிறார். அதிமுக ஆட்சியின் போது இதுபோல குழு அமைத்தாரா? அமைத்திருந்தால் அம்மா சும்மா இருந்திருப்பாரா?
சினிமாவில் ரஜினியை எதிர்த்து அறிக்கை விட்டால் பெரிய ஆள் ஆகிவிடலாம் என்பார்கள். அதுபோல அரசியலில் ஆளும் கட்சியை எதிர்த்து அரசியல் நடத்தினால் ஆட்சிக்கு வந்துவிடலாம் என்பார்கள். இரண்டுமே மாயை. ரஜினியை எதிர்த்த மன்சூரலிகானும், மனோரமாவும் சினிமாவில் எப்படி காணாமல் போனார்களோ, அதுபோலவே அய்யாவும் வெகுவிரைவில் அரசியலில் இருந்து காணாமல் போகப்போவது உறுதி.
இரு திராவிடக் கட்சிகளும் கைவிட்டால் அரசியல் நடுத்தெருவில் அனாதை ஆனந்தனாக நிற்க வேண்டிய நிலைமையே டாக்டர் அய்யாவுக்கு வரும். இந்த நிலையை வைகோ புரிந்து கொண்டிருக்கிறார். அய்யாவும் புரிந்துகொள்ள வேண்டும்.
http://kalaignarkarunanidhi.blogspot.com/2007/08/blog-post_23.html
|