|
தமிழ்நதி
|
வந்தமர்ந்த சில நொடிக்குள்
ஒளிவட்டம் சுழலத்தொடங்கிற்று
அதன் வண்ணக்கதிர்கள் சிதறிப்பரவின
என் சிறிய அறையெங்கும்.
வியந்து பார்த்திருந்தேன்.
நாற்காலி அந்தரத்தில் மிதந்துகொண்டிருக்க
மேகங்களைத் திரித்து பஞ்சாக்கி
காது குடைந்தான்
சட்டையில் ஒட்டியிருந்த நட்சத்திரங்களை
அலட்சியமாக உதற
அவை மின்னலில் போய்விழுந்தன.
தொண்டை வறண்டுபோக
கடலைக் குடிக்கக் கேட்டான்
எலுமிச்சைச்சாறு கொடுத்தும் பயனில்லை.
சற்றைக்கெல்லாம் ஊழிக்கூத்து தொடங்கிற்று
செஞ்சடை விரிந்து பறக்க
உயர்த்திய காலில் தட்டுண்டு
உருண்டது பூமிப்பந்து.
‘பாரதியைத் திருத்தி பதிப்பிக்க உத்தேசம்
முடிந்தால் புதுமைப்பித்தனையும்’ என்றவனின்
விஸ்வரூபத்தில் வீடு நாணிற்று.
திருவருகை நிகழ்ந்து ஒருமாதம்
இன்னும் ஆடிக்கொண்டிருக்கிறது
அவனிருந்த நாற்காலி
வெறுப்பின் சுழற்காற்றில்.
http://tamilnathy.blogspot.com/2006/10/blog-post_13.html
|