Let's hit the nail....
RIGHT ON ITS HEAD !
No..no..
LET US HIT THE NAILS
RIGHT ON THEIR HEADSS
RIGHT ON THEIR HEADS
பார்ப்பனீயமே இன்றுள்ள சாதீயக் கொடுமைகளுக்கு அடிமைத்தளம் அமைத்துக் கொடுத்த சனாதன தர்மத்தை அன்றிலிருந்து இன்றுவரையும் கட்டிக் காத்து, நிலைத்து நிற்க வைத்துள்ளது என்பது ஒரு வரலாற்று உண்மை. கல்வியில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக முதலிடத்தைத் தங்களுக்கென்றே வைத்துக் கொண்டு அக்கல்வியால் சமூகத்தில் ஓர் உயர்ந்த இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்கள் என்பதும் ஒரு மறுக்க முடியா உண்மை.
சுதந்திரத்திற்குப் பின் ஏற்பட்ட சமூக மாற்றங்களினாலும், ஓரளவு சமூகத்தில் ஏற்பட்ட விழிப்புணர்வுகளாலும் தங்கள் வெளிப்படையான (overt) அடக்கு முறைகளை விடுத்து, புதிய வியூகம் வகுத்து தங்கள் சமூக உயர் நிலையைத் தக்க வைத்துக் கொள்ள அவர்கள் எடுத்த புது முயற்சிகள் அவர்களைப் பொறுத்தவரையில் சரியானதே. அரசாங்க வேலைகள் என்பதிலிருந்து ஆசிரியர், வழக்கறிஞர்கள் என்று பெருவாரியாக இருந்த இந்த சமூகத்தினரின் அடுத்த குறி மருத்துவர்கள் என்று ஆகி, பின் ஆடிட்டிங், வங்கி வேலைகள் என்று மாறி, பெரும் வியாபரங்களில் தொடர்ந்து, ஆடல் பாடல் என்றிருந்து, இன்று மென் பொருளாளர்களாகவும் நிரந்து நிறைந்து இருப்பது அவர்களது flexibility - கால மாற்றங்களுக்கேற்ப தங்கள் வாழ்க்கை முறையை மாற்றி எப்போதும் தங்கள் முன்னிலையை தக்க வைத்துக் கொள்ளும் திறமைக்குச் சான்றுகளாகும். அவர்களைப் பொறுத்தவரை இதைத் தவறென்று கூற இயலாதுதான். ஏற்கெனவே கிடைத்த கல்வியறிவால் இந்த தகவமைப்பை (adaptability) பெற்று தங்கள் சமூகத் தரத்தைக் காப்பாற்றிக் கொண்டுள்ளதைப் பாராட்டித்தான் ஆகவேண்டும்.
ஆனால், அன்று அப்படி இருந்தவர்கள் இன்றும் AIMS- களில் IIT- களில் மற்றவர் வந்து விடக்கூடாதென்பதில் மிகத்தீவிர மனப்பான்மையோடும், UPSC தேர்வுகளில் தங்கள் சாதிக்கு வழக்கமாகக் கிடைத்து வரும் விழுக்காடு விழுந்துவிடக் கூடாது என்பதில் அவர்கள் காட்டும் அதி அக்கறையும் எல்லோருக்கும் தெரிந்ததுதான். மீடியாக்களின் ஆளுமையை முழுவதுமாகக் கைக்குள் வைத்துக் கொண்டு சமூக அளவு கோல்களையும், மொத்த சமூகத்திற்கான கருத்துப் படிமானங்களையும் வகுக்கும் அவர்களது திறமை எல்லோருக்கும் தெரிந்ததுதான்.
NAIL: 1
இந்தப் பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டியதே இப்போதைய கால கட்டத்தில் மிக மிக அவசியமாகிறது. ஆனால் இது தெருவில் நடக்கும் சண்டையல்ல. இதனை எதிர்கொள்ள வேண்டிய இடமும், முறையும் முழுமையாக வேறு. பாராளுமன்றங்களிலும், நீதிமன்றங்களிலும், இன்னும் வேகமாக வெகுசன ஊடகங்களிலும் செய்ய வேண்டியவை நம்முன் மலையென நிற்கின்றன.
ஆனால் இதை விட்டு விட்டு இன்று நடக்கும் சாதீய பூசல்கள் எல்லாவற்றிற்கும் காரணம் என்று அச்சாதியினரைக் கை காண்பிப்பதும், அதற்காக அவர்களைச் சாடுவதும் எந்த அளவு சரியாக இருக்கும்? தலித்துகளுக்குக் கிடைக்க வேண்டியவைகள் இன்னும் அவர்களைப் போய் சேருவதில்லை. அரசு தரும் உதவிகளைப் பற்றிய அறிவும், புரிதலும் இல்லாத தலித் மக்களையே நாம் காண்கிறோம். அதோடு அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளோ சொல்லி மாளாதவை.
சமீபத்தில் மகாராட்டியத்தில் கலியாஞ்சியில் நடந்த கொலைவெறியாட்டங்கள், பீகாரில் செத்த பசுவின் தோலையுரித்ததற்காகக் கொல்லப்பட்ட நான்கு தலித் இளைஞர்கள், நம்ம ஊரில் நடந்த திண்ணியம், வெண்மணி வெறியாட்டங்கள், அவ்வளவு ஏன் 10 ஆண்டுகளாக தலித்கள் என்பதாலேயே பஞ்சாயத்துத் தலைவர்களாக அவர்களை வரவிடாதிருக்க வைத்த அரசியல் விளையாட்டுக்கள் - இவை
எல்லாவற்றிற்குமா பார்ப்பனீயத்தையும், அந்த சாதிக்காரர்களையும் காரணம் காட்டிக் கொண்டிருக்கப் போகிறோம். That will be absolutely like whipping the wrong horse.
அவர்கள் ஆதி காரண கர்த்தாக்கள் என்றே வைத்துக் கொண்டாலும் இன்னும் எத்தனைக் காலத்திற்கு அந்த வரலாற்றுக் காரணத்தை மட்டும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்? இதனால் ஏற்படுவது இன்னொரு மிகப்பெரிய தவறான பின் விளைவு: பார்ப்பனீயத்தைத் திட்டிக் கொண்டே, இன்று அதைவிடவும் கீழ்த்தரமாகவும், கொடூரமாகவும் தலித்துகளை சிறுமைப்படுத்துவதும், கொடுமைப் படுத்துவதும் மற்ற 'நடு' சாதியினர் என்பதே மறைந்து விடுகிறது; மறைக்கப்பட்டு விடுகிறது. முன்பே ஒரு பதிவில் இதனைக் குறிப்பிட்டுள்ளேன்.
கல்லெறியும், கண்டனமும் வேறு சாதியினர் மேல்தான் விழும் என்பதாலோ என்னவோ, இந்த நடு சாதியினர் தலித்துகளை இன்றும் மிகக் கடுமையாக நடத்தி வருவதே கண்கூடு. செய்வதைச் செய்து விட்டு, கூட்டத்தோடு கூட்டமாக உயர்த்திக் கொண்டவர்களைத் தாக்கி அவர்களும் எல்லோருடன் சேர்ந்து கோஷங்கள் போடுவதாகத்தான் தெரிகிறது! அதோடு நான் எனது அந்த முந்தியப் பதிவில் சொன்னது போல, எப்போதுமே ஓட்டப்பந்தயத்தில் போட்டியின் கடுமை அடுத்தடுத்து ஓடுபவர்களுக்கு நடுவில்தான். தன்னைவிட தாழ்ந்தேயிருந்த 'இவர்கள்' தங்களைத் தாண்டிவிடுவார்களோ, தாண்டுகிறார்களோ, தாண்டிவிட்டார்களோ என்ற அச்சம் காரணமாகவே இந்தப் போராட்டம். Hierarchy-ல் அடுத்தடுத்த நிலையில் உள்ளோருக்குள் ஏற்படும் பொறாமையின் விளைவே இது. இந்த மனப்பான்மைதான் இந்த 'நடு' சாதியினரை தலித்துகளைப் போட்டி மனப்பான்மையோடும், அதனால் விளைந்த பொறாமைக் கண்ணோட்டத்தோடும் பார்க்க வைக்கிறது. இதன் விளைவுகளாகவே தலித்துகளின் மேல் நடக்கும் வன்முறைகளை நான் காண்கிறேன்.
உயர்த்திக் கொண்டவர்கள் 'தங்கள் வேலையைப்' பார்த்துக் கொண்டு போய்க் கொண்டிருக்க, மற்ற சாதிக்காரர்கள் தங்களுக்குள் பொறாமை கொண்டு, பொருது கொண்டு ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் சமூக நிலைக்குக் கீழேயுள்ளவர்களை நோக்கி தங்கள் வன்மத்தைக் காண்பித்துக் கொண்டிருப்பதும்தான் இன்றைய நிலை.
இந்த நிலையில் இந்தக் கீழ்த்தரச் செயல்களுக்கு மூவாயிர, நான்காயிர ஆண்டு வரலாற்றைச் சொல்லி அந்த உயர்த்திக் கொண்டவர்களையே சாடிக்கொண்டிருப்பதை விடவும், இன்றைய தேவை யார் ஒரு கொடுமையைத் தலித்துகளுக்கு எதிராகச் செய்கிறார்களோ அவர்களைப் "பெயரிட்டு", அவர்களைத் தோலுரித்துக் காட்ட வேண்டும். நமது மீடியாக்களிலும் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் நடக்கும்போது வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டவர்களைப் பற்றிய விவரங்கள் வெளியே தெரியாதபடி 'பாதுகாத்து' விடுகிறார்கள். நம் சமூகத்தின் உண்மை முகங்கள் நமக்கே தெரியாமல் போய்விடுகின்றன. மீடியாக்களில் தலித்துகளின் மீது "caste hindus" / "ஜாதி இந்துக்களின்" வெறியாட்டம் என்றுதான் வரும். (அப்படியானால், தலித்துகள் என்ன சாதியில்லா இந்துக்களா? அல்லது அவர்கள் இந்துக்களே இல்லையா? இரண்டாவதுதான் சரியென்பது என் எண்ணம்.) யார் இந்த "caste hindus" / "ஜாதி இந்துக்கள்" என்று யாருக்கும் தெரியாமலே போய்விடுகிறது. இது போன்ற தவறு செய்தவர்களே இன்னொரு
இடத்தில் மனித உரிமை, தலித்துகளின் தளையறுப்பு, சாதி வெறிக்கு எதிர்ப்பு - என்று பல வெத்துக் கோஷங்களைப் போட்டுக்கொண்டு உத்தமர்களாக வேடமிட அனுமதிக்கக் கூடாது. குற்றம் செய்தவர்களின் சாதிய முகத்திரைகள் கிழிக்கப்பட்டு அவர்களின் நிஜ முகங்களை எல்லோருக்கும் காட்ட வேண்டும்.
NAIL: 2
'குற்றமே செய்யாதவன் முதல் கல்லை எறியட்டும்' என்ற கதை போலல்லாமல் இனியாவது குற்றம் செய்தவர்களை வெளியே சமூகத்திற்குத் தெரியும்படி கொண்டுவர வேண்டுவது அவசியம். குற்றம் செய்தவர்களைச் சமூகத்தின் முன் காண்பிப்பதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாகவேனும் குற்றம் புரியும் சாதிக்காரர்கள் தங்களைத் திருத்திக் கொள்ள முன்வர மாட்டார்களா? அந்தச் சாதி அமைப்பிலே உள்ள சிலரேனும் மனசாட்சியின் உறுத்தலால் தங்கள் மற்ற சாதிக்காரர்கள் வரம்பு மீறுவதைக் கண்டித்து அவர்களை மாற்ற முயலமாட்டார்களா? பல ஆண்டுகளாக பாப்பாபட்டி இன்னும் மற்ற இடங்களில் பஞ்சாயத்துத் தேர்தலே நடக்க விடாமல் செய்து வந்தும் அந்த கிராமங்களில் 'பெரும்பான்மை சாதி'யினரின் எதிர்ப்பு என்றே எழுதி வந்தனர். இப்போதுதான் ஓரிரு ஆண்டுகளாக கள்ளர் இன மக்களே இதற்குக் காரணம் என்பது வெளிப்படையாகப் பேசவும், எழுதப்படவும் செய்யப்பட்டது.இப்போது நடந்த மாற்றத்திற்கு இதுவும் ஒரு காரணியாக இருந்திருக்க வாய்ப்புண்டு என்றே தோன்றுகிறது.
இப்படி சாதியைக் குறிப்பிட்டுப் பேசுவதால் ஒரு சில விருப்பமில்லா பின் விளைவுகளும் ஏற்படலாம். ஆயினும் இதைச் செய்தே ஆக வேண்டும்; அதுவே குற்றமிழைப்பவர்களை ஓரளவேனும் கட்டுக்குள் கொண்டு வரும்.
சாதிகளை நம் சமூகத்திலிருந்து ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. நம் சமுதாயத்தின் நீண்டு, நிலைபெற்ற களங்கமாக இன்னும் எத்தனை எத்தனை காலம் இருக்கப் போகிறதோ..? ஆகவே, சாதீய வேறு பாடுகளைக் களைய நினைப்பவர்கள் செய்ய வேண்டியவைகளில் முன்னால் நிற்பது இரு வேறு பட்ட நிலைக் களன்கள். ஒன்றில், ஒடுக்கப்பட்டவர்களுக்குக் கிடைக்க வேண்டியவைகளை யாரும் நிறுத்தவோ, தடுக்கவோ விடாதபடி கண்காணிக்க வேண்டும்; இன்னொன்று, அவர்களைக் கீழ்படுத்திச் சிறுமைப்படுத்தும், கொடுமைப்படுத்தும் மற்ற சாதியினரிடமிருந்தும் காக்க வேண்டும். இருமுனைப் போராட்டம் இது. இதில் இரண்டுபட்ட பார்வை தேவை. ஒன்றின் மீது மட்டும் "கண் வைத்து" மற்றொன்றை கண்டு கொள்ளாமல் செல்வதும் தவறாகப் போய்விடும். முதலாவதற்கு வார்த்தைகளும் வம்புகளும் தேவையில்லை; 'சத்தமில்லாமல்' நடந்தேறும் காரியங்களைக் கவனித்து எதிர்வினைகளை முறையாக ஆற்ற வேண்டிய தேவை அதிகம். இரண்டாமாவதில்தான் எழுத்துக்களுக்குப் பயன் இருக்கும்.
NAIL: 3
இதையெல்லாம் விடவும் தலித்துகள் தங்களுக்குள் உயர்வு தாழ்வு சொல்லி ஒற்றுமையின்றி இருக்கும் வரை அவர்களின் முயற்சிகள் எந்தப் பயனுமில்லாமல்தான் இருக்கும். அவர்கள் முதலில் தங்கள் 'வீட்டைச்' சீர்செய்து கொண்டு ஒரே முனைப்போடு தங்கள் உயர்வுக்காகப் போராடினாலே அதில் அர்த்தமும் இருக்கும்; பலனும் இருக்கும். அவர்களுக்காக மற்றவர்கள் போராடுவது என்ற நிலை மாறி, தாங்கள் எழ வேண்டும் என்ற தீவிரம் அவர்கள் மனத்தில் எழவேண்டும். அவர்களை ஒன்றுபட்டு எழ வைப்பதற்கு அவர்கள் மனத்தில் அந்த அக்கினிக் குஞ்சு எப்போது விழுமோ ...?
*
*
|